Skip to main content

முருகனைக் கொல்ல சதி? -நிர்மலாதேவி வழக்கில் திகில் திருப்பம்!

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
nirmaladevi

 

ல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் திங்களன்று ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் மூவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த உத்தரவுக்குப்பிறகு, நிர்மலாதேவி தனியாக ஒரு போலீஸ் வாகனத்திலும், முருகனும் கருப்பசாமியும் வேறொரு போலீஸ் வாகனத்திலும் மதுரை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 

nirmaladevi



ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து முருகன், கருப்பசாமி சென்ற போலீஸ் வாகனம் கிருஷ்ணன்கோவில் என்ற ஊரை அடைவதற்கு முன்பாக, எதிர் திசையில் வந்துகொண்டிருந்த நாச்சியார் மில் வேன், போலீஸ் வாகனத்தில் நேருக்கு நேர் மோதுவது போல் மிக வேகமாக வந்தது. அதனால் நிலைகுலைந்துபோன போலீஸ் வாகனம், எதிரில் வந்துகொண்டிருந்த டாடா ஏஸ் (பச 67 ஃ 5830) வாகனத்தின் பக்கவாட்டில் உரசியபடி மோதி சாலையின் வலதுபுறத்தில் பிரேக் அடித்து நின்றது. இந்த திடீர் விபத்தால், முருகன், கருப்பசாமி மற்றும் உடன்சென்ற எஸ்கார்ட் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
 

டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் முருகானந்தத்திடம் எஸ்கார்ட் காக்கிகள், “"பாருடா... சைடுல உன் வண்டி மோதி ஸ்க்ராட்ச் ஆயிருச்சு. ஒழுங்கு மரியாதையா... சரிபண்ணிக் கொடுத்திரு...'’என்று சவுண்ட் விட, பதிலுக்கு முருகானந்தம் "சார்... தப்பு உங்க மேலதான். ரைட் எடுத்து என் வண்டிமேல உங்க வேன் மோதி, என் வண்டியும் டேமேஜ் ஆயிருச்சு. நியாயமா பார்த்தா, நீங்கதான் எனக்கு பணம் தரணும்'’’ என்று நியாயத்தை எடுத்துரைக்க... அந்த இடம் ஒரே கூச்சலும் குழப்பமும் ஆனது.

 

nirmaladevi




அந்த நேரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் முருகனைப் பார்த்துவிட்டு இன்டிகா காரில் மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த அவருடைய கொழுந்தியாள் சுவீதா, இந்த விபத்து ஸ்பாட்டைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். அவர் போலீஸ் வேனிலிருந்து இறங்கி நின்ற முருகன் பக்கத்தில் சென்று பேச... அவரிடம் "மயிரிழையில் உயிர் தப்பிச்சேம்மா...'’என்று உடல் நடுக்கத்துடன் கண் கலங்கினார் முருகன்.


சம்பவ இடத்தில் சுவீதா நம்மிடம் ""ஏற்கனவே எங்க மாமா (முருகன்) உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நாங்க கேள்விப்பட்டதை சொல்லிக்கிட்டிருக்கோம். இப்ப பாருங்க. வேணும்னே எங்க மாமா இருந்த சைடுல மோத வந்திருக்குது ஒரு வேன். அந்த வேனைக்கூட பிடிக்காம விட்ருச்சு போலீஸ். ஒரு தவறும் செய்யாத நிரபராதிகளை எட்டு மாசமா சிறையிலேயே வச்சிருக்காங்க. ஜாமீனும் தரல. ஜெயில்ல வச்சே விசாரிச்சு வழக்கை முடிக்கணும்கிறது கோர்ட் உத்தரவு. அடுத்தமுறை, கோர்ட்டுக்குக்கூட ஜெயிலைவிட்டு வெளிய வரவிடாம, ஜெயிலுக்குள்ளேயே விசாரிக்கிறதுன்னு யாரோ முடிவு பண்ணிட்டாங்க. எங்களுக்கு சந்தேகமாத்தான் இருக்கு. எங்க மாமாவைக் கொல்லுறதுக்கு யாரோ சதி பண்ணுறாங்க''’என்று புலம்பினார். திகிலூட்டும் திடீர் திருப்பமாக இருக்கிறது இந்த விபத்து!

 

 

 

Next Story

கடனைச் செலுத்தாதவர் மகளை வீட்டுக்குள் பூட்டிய வங்கி ஊழியர்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

Bank loan issue arupukottai police investigation

 

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி, ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடன் தவணைத் தொகையை கடந்த 2 மாதங்களாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அண்ணாமலையும் இன்னொருவரும், கடந்த 23-ஆம் தேதி பாண்டீஸ்வரியின் வீட்டிற்குச் சென்று தவணைத் தொகையைக் கேட்டுள்ளனர். அப்போது பாண்டீஸ்வரி, கடன் தவணையைச் செலுத்த அவகாசம் கேட்டுள்ளார். உடனே அண்ணாமலையும் அந்த இன்னொருவரும் பாண்டீஸ்வரியின் சமூகத்தைச் சொல்லி இதற்குத்தான் உங்களுக்கு லோன் தரக்கூடாது என்று இழிவாகப் பேசியதோடு, ஒரு வாரத்தில் தவணைத் தொகையைச் செலுத்தாவிட்டால் உடையைக் கழற்றி உட்கார வைத்துவிடுவேன் என்று ஆபாசமாகத் திட்டியிருக்கிறார்கள்.

 

கடந்த 31-ஆம் தேதி, பாண்டீஸ்வரியும் அவருடைய கணவர் விஜயகுமாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அண்ணாமலையும் மேலும் 4 பேரும் வீட்டுக்குள் நுழைந்து பாண்டீஸ்வரியின் மூத்தமகள் விசாலினியிடம், உங்க அம்மா எங்கே போய் ஒளிந்துகொண்டாள் என்று அசிங்கமாகத் திட்டிவிட்டு, விசாலினியை அந்த வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, சாவியை எடுத்துச் சென்றுவிட்டனர். மகளது நிலையைக் கேள்விப்பட்ட பாண்டீஸ்வரியும் விஜயகுமாரும் வீட்டுக்கு வந்து மகளை மீட்டுள்ளனர். 

 

தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அண்ணாமலை மற்றும் உடன் வந்த நால்வர் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில் பாண்டீஸ்வரி புகாரளிக்க, வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியிருக்கிறது. 


 

Next Story

அருப்புக்கோட்டை அருகே இரட்டைக்கொலை

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Two passed away in arupukottai
ரத்தினவேல் பாண்டியன்

 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. டி.ஐ.ஜி பொன்னி நேரில் விசாரணை நடத்துகிறார்.

 

என்ன முன்விரோதம்?

திமுக மகளிரணி துணை அமைப்பாளரும், திருச்சுழி வட்டம், உடையனாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியுமான ராக்கம்மாள், கடந்த மார்ச் 12-ஆம் தேதி குடும்பப் பிரச்சினையால், உறவினர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருச்சுழி காவல்நிலையம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தது. இந்தக் கொலைவழக்கில் தொடர்புடைய உடையனாம்பட்டியைச் சேர்ந்த சபரிமலை ஜாமீனில் வெளிவந்து திருச்சுழி வட்டம், குலசேகரநல்லூரைச் சேர்ந்த தனது உறவினரான ரத்தினவேல் பாண்டியன் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், சபரிமலையும் ரத்தினவேல் பாண்டியனும் அருப்புக்கோட்டை காந்தி நகர் அருகிலுள்ள புதர்க்காட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராக்கம்மாள் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த இரட்டைக்கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

Two passed away in arupukottai
சபரிமலை

 

சம்பவ இடத்திற்குச் சென்று நள்ளிரவில் இருவரது சடலங்களையும் அருப்புக்கோட்டை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், கொலை நடந்த இடத்தில் விருதுநகர்  மாவட்ட எஸ்.பி. மனோகர் தலைமையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்துள்ளனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.   மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி நேரில் வந்து ஆய்வு செய்து, விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார். நடந்த இரட்டைக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர குற்றப்பிரிவு காவல்துறையினர், உடையனாம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சந்தன மகாலிங்கம், சுந்தர்ராஜ் மகன் கருப்பையா, மற்றும் சிவகாசியைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பையா, சுந்தர்ராஜ் மகன் பெரியசாமி, சுந்தர்ராஜ் மகன் குருசாமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

 

Two passed away in arupukottai

 

இந்நிலையில், இந்த இரட்டைக்கொலையில் தொடர்புடையவராகக் கருதப்படும் உடையனாம்பட்டி ராக்கம்மாளின் மகன்களான சூரியபிரகாஷ், ஜெயப்பிரகாஷ், மற்றொருவரான முகேஷ்குமார் ஆகிய மூவரும் மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர், இக்கொலையில் தொடர்புடையவர்களாகக் கருதி வழக்குப்பதிவு செய்து 5 பேரைத் தேடிவரும் நிலையில், மதுரை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சரணடைந்த மூவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.