Skip to main content

ஒபிஎஸ்-இபிஎஸ் நாடகம் அம்பலம் – ஒ.ராஜா ஆவின் தலைவர் பதவி ஏன் பறிக்கப்படவில்லை?

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
eps ops

 

அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக ஒபிஎஸ்சின் தம்பி ஒ.ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் கூட்டாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ, மீடியாக்களில் பெரிதாக பரபரக்கப்பட்டது.
 

தம்பியாக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் இல்லை என்பதை நிருபித்திருக்கிறார்கள் என்றெல்லாம் ஆளாளுக்கு பில்டப் செய்தார்கள்.
 

ஒ.ராஜா இப்போதுதான் களங்கம் ஏற்படுத்தினாரா? பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு, மணல்கடத்தல் வழக்கு என்றெல்லாம் ஒ.ராஜா மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது திடீரென்று களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறுவதன் பின்னணி என்ன?
 

பெரியகுளம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து தேனி தொகுதியில் செல்வாக்கு மிக்கவர். அதிமுக மாவட்ட பொருளாளராக இருக்கிறார். இவருக்கு மதுரை ஆவின் கூட்டுறவு தலைவர் பதவியை பெற்றுத் தருவதாக ஒபிஎஸ் கூறியிருக்கிறார். ஆனால், ஒ.ராஜா தலைவர் பதவியைக் கைப்பற்ற மறைமுகமாக உதவியிருக்கிறார். இதனால் செல்லமுத்து ஒரு பெரிய கூட்டத்தோடு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரப்போவதாக தெரியவந்தது.
 

இதையடுத்து, தன்னை யோக்கியராக காட்டிக்கொள்ள தம்பியை கட்சியிலிருந்து விலக்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் ஒபிஎஸ். அதற்கு இபிஎஸ்சும் ஒத்துப்போயிருக்கிறார். ஆனால் இவர்களுடைய நாடகம் எடுபடவில்லை.
 

கட்சியிலிருந்து நீக்கியவர்கள், ஒ.ராஜாவின் ஆவின் தலைவர் பதவியை பறிக்க முடியுமா என்று கட்சிக்காரர்கள் கேட்கிறார்கள். ஒபிஎஸ்சுக்கு தெரியாமலா ஆவின் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார்? ஒபிஎஸ் ஆதரவு இல்லாமலா அவருக்கு அதிமுகவினர் வாக்களித்தனர்? வெள்ளிக்கிழமை பதவி ஏற்கப்போவதாக கூறிய ஒ.ராஜா, கட்சியிலிருந்து நீக்கப்படுவதை அறியாமலா அவசரஅவசரமாக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
 

o.raja


கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தாலும், ஒ.ராஜா ஆவின் தலைவராக நீடிப்பதை தடுக்க முடியவில்லையா என்று சரமாரியாக வினா தொடுக்கிறார்கள். தேனியில் ஏற்கெனவே, தங்க தமிழ்செல்வன் ஊசலாட்டத்தில் இருப்பதாக கூறும் நிலையில், இப்போது செல்லமுத்து குரூப்பையும் வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.
 

இந்நிலையில்தான், அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து அதிலும் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

 

 

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.