Skip to main content

மலர்வதற்கு முன் கருகிய ஆபரேஷன் லோட்டஸ்!

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட ஆபரேஷன் லோட்டஸ் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்திருக்கிறது.  எடியூரப்பா மேற்கொண்ட இந்த ஆபரேஷன் ஏற்படுத்திய அவமானம் காரணமாக கட்சி மேலிடமே ஆபரேஷனை கைவிடும்படி கூறியிருக்கிறது.

 

bjp

 

கர்நாடகாவில் 2018 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக வந்தாலும், ஆட்சி அமைக்க போதுமான 113 இடங்களைப் பெறவில்லை. ஆனாலும், ஆட்சி அமைக்கும் உரிமையைக் கோரி, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஆபரேஷன் லோட்டஸை தொடங்கியது. அது வெற்றி பெறாததால் நம்பிக்கை வாக்குக் கோருவதற்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

 

அதன்பிறகு, கடந்த மாதம், 7 மாதங்களே ஆன கூட்டணி அரசை கவிழ்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மேலிட அனுமதியோடு இரண்டாவது முறையாக ஆபரேஷன் லோட்டஸை கையில் எடுத்தார் எடியூரப்பா.

காங்கிரஸ், மஜத கட்சிகளின் எம்எல்ஏக்களை விலை பேசி இழுத்து ஆட்சியைக் கவிழ்க்கவும், அதிகாரத்தை கைப்பற்றி, மக்களவைத் தேர்தலை சந்திக்கவும் எடியூரப்பா திட்டமிட்டார்.

 

bjp

 

இதற்காக பாஜக எம்எல்ஏக்களை குர்காம் என்ற இடத்தில் பத்திரப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியோ தனது எம்எல்ஏக்களை பெங்களூரு ரிசார்ட்ஸில் தங்கவைத்தது. அப்படி இருந்தும் காங்கிரஸில் பதவிக்காக சண்டையிடும் 4 எம்எல்ஏக்கள் மும்பைக்கு சென்றுவிட்டனர். கூட்டணி அரசுக்கு ஆதரவளித்த இரண்டு சுயேச்சைகள் அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். ஆனாலும், 104 இடங்களை வைத்திருந்த பாஜகவுக்கு இந்த ஆதரவு போதாது.

 

இந்நிலையில்தான், தனது கட்சி எம்எல்ஏவான நாகன கவுடாவின் மகன் சரண கவுடாவிடம் எடியூரப்பா நடத்திய பேரத்தின் ஆடியோவை வெளியிட்டார் முதல்வர் குமாரசாமி. முதலில் தனது குரலைப் போல மிமிக்ரி செய்து ஆடியோ தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறிய எடியூரப்பா, பின்னர் சரணகவுடாவை சந்தித்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் ஏற்படுத்திய நெருக்கடியால், ஆபரேஷனையே கைவிடும்படி பாஜக மேலிடம் கூறிவிட்டது.

 

bjp

 

இது வெறும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மட்டுமல்ல. பலவிதமான அரசியல் போட்டிகளின் கலவை என்கிறார்கள் கர்நாடகா அரசியல் விமர்சகர்கள். கூட்டணி அரசின் ஆயுள் காலம் நீடித்தால், காங்கிரஸ் கோஷ்டி அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் தனது முக்கியத்துவம் காணாமல் போய்விடும் என்று சித்தராமய்யா நினைக்கிறார். ஆனால், கோஷ்டிகளை சமாளித்து, மஜதவை மெகா கூட்டணிக்குள் வைத்து மக்களவைத்த தேர்தலை சந்திக்க ராகுல் திட்டமிடுகிறார்.


துணை முதல்வராக இருக்கும் பரமேஷ்வரா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு முக்கியத்துவம் கிடைத்தால் தனது முக்கியத்துவம் பறிபோகும் என்று அவர் பயப்படுகிறார். எனவே, தனது இருப்பைத் தக்கவைக்க பாஜகவின் முயற்சியை தோற்கடிக்க கடுமையாக போராடி வென்றிருக்கிறார். நெருக்கடிகளை தீர்ப்பவர் என்று ராகுலே பாராட்டியிருக்கிறார். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டி தனது செல்வாக்கை முதல்வர் குமாரசாமிக்கு நிரூபித்தார் சித்தராமய்யா.
 

பாஜகவுக்குள் எடியூரப்பாவின் ஆதிக்கம் வலுப்பெறுவதை விரும்பாதவர்கள் ஆபரேஷன் லோட்டஸ் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அவர்கள், இப்போதைய ஆட்சியைக் கவிழ்க்காமலே மக்களவைத் தேர்தலை பாஜக சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டால் பாஜக எம்எல்ஏக்களுக்குள் பிளவு ஏற்படுமோ என்று எடியூரப்பா பயப்படுகிறார். இருந்தாலும், அவருடைய ஆபரேஷன் தோல்விக்கு உள்கட்சிக்குள் அவருடைய எதிரிகளும் ஒரு காரணமாக இருந்தார்கள்.
 

இவர்களுடைய சண்டைக்கு மத்தியில்தான், எடியூரப்பாவின் பேரத்தை ஆடியோவாக்கி தனது இருப்பை உறுதிப்படுத்தி குமாரசாமியும் தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள்.

 

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.