Skip to main content

டீ வியாபாரம் டூ ரபேல் விமான வியாபாரம்?

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

modi

 

மோடியைப் பற்றி பேசும் அவருடைய கட்சிக்காரர்கள் அவர் சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றதை பெருமையாக கூறுவார்கள். மோடியும்கூட இதை அவ்வப்போது கூறிக்கொள்வது உண்டு.

 

தன்னை ஒரு ஏழைத்தாயின் மகனாக காட்டிக்கொண்டு அனுதாபம் பெற விரும்பும் மோடி, குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அங்கு நடத்திய படுகொலைகளைப் பற்றி பேசமாட்டார். தனக்கு மனைவி இருந்ததையே மறைத்த அவர், பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சமயத்தில் உண்மை வெளியானதால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

 

சமீப நாட்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி ஒரு திருடர் என்று பகிரங்கமாக கூறிவருகிறார். அடிக்கடி இந்த வார்த்தையை மோடியை நோக்கி கூறினாலும் அதற்கு நேரடியாக மறுப்புத் தெரிவிக்க மோடி தயாராக இல்லை. 5 நிமிடம் தன்னுடன் விவாதிக்க தயாரா என்றுகூட ராகுல் கேட்டுவிட்டார். விவாதிப்பதைத் தவிர வேறு எல்லா வகையிலும் கத்திப் பேசுகிறார் மோடி.

 

modi

 

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் மறுக்கிறார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை அள்ளி அனில் அம்பானிக்கு வாரிக்கொடுத்துவிட்டார். அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகலை இழுத்து மூட மோடி திட்டமிட்டிருக்கிறார். அம்பானி புதிதாக தொடங்கப்போகிற விமான உதிரிபாக உற்பத்தி நிறுவனத்திற்கு மக்கள் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார் மோடி என்றெல்லாம் ராகுல்காந்தி குற்றம்சாட்டுகிறார்.

 

ராணுவ அமைச்சகத்தை புறக்கணித்துவிட்டு, பிரதமர் அலுவலகமே ரபேல் விமான பேரத்தில் நேரடியாக தலையிட்டிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கத்துடன் மோடியே நேரடியாக பேச்சு நடத்தி, யாருக்காக இந்த ஒப்பந்தத்தை ரகசியமாக முடித்துக் கொடுத்தார். முன்னாள் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை மீறி பிரதமர் அலுவலகம் இந்த பேரத்தை முடித்தது எப்படி என்றெல்லாம் வினாக்கள் எழுப்பினார். இப்போது அதற்கான ஆதாரங்களை தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட்டு வருகிறார்.

 

இவற்றைப்பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பினால் முடிந்த பிரச்சனையை திரும்பத்திரும்ப கிளறுவதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஒரு பிரச்சனை முடிந்துவிட்டது என்று எப்படி அவர் கூறுகிறார் என்பதே தெரியவில்லை. ஒருவர் செத்துப் போய்விட்டார் என்று புதைத்துவிட்டாலும், அவருடைய சாவில் சந்தேகம் எழுப்பினால் பிணத்தை தோண்டி விசாரணை நடத்துவதில்லையா? அப்படி இருக்கும்போது, அடுத்தடுத்து ஆதாரங்களும் சந்தேகங்களும் எழும்போது, அதுவும் பிரதமர் மீதே நேரடியாக புகார்கள் எழும்போது விளக்கம் அளிப்பதுதானே சரியாக இருக்கும்? அதைவிடுத்து, பிரச்சனை முடிந்துவிட்டது என்று அமைச்சரே கூறினால் எப்படி சரியாகும்?

 

modi


 

நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல ரபேல் விவகாரம் செத்த பாம்பு அல்ல… அது படமெடுத்து சீறும் பாம்பு. அந்த பாம்பு பிரதமரை விடாமல் துரத்துகிறது. அவரும் நிர்மலா, ஜெட்லி போன்றோர் பின்னால் ஒளிந்து தப்ப முயற்சிக்கிறார். இது எங்கே கொண்டுபோய் முடியும் என்பதை நாடு வேடிக்கை பார்க்கிறது.

 

இதனிடையே, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பெருகிவரும் ஆதரவு, மோடியை திணறடிக்கிறது. தனது முதலாளிகளுக்கு சாதகமாக ரபேல் விமான பேரத்தை முடித்து, ஊழல் செய்திருக்கிறார் மோடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

 

சுதந்திர இந்தியாவின் எந்த பிரதமரும் இதுவரை மோடியைப் போல நேரடியாக ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டதில்லை. பிரதமரே தனது முதலாளிக்காக பேரம்பேசியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது இதுதான் முதல்முறை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை தன்னை சாயா விற்பவராக கூறிவந்த மோடி, இப்போது ரபேல் விமான வியாபாரம் செய்பவராக மாறியிருக்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கிண்டல் செய்திருக்கிறார்.

 

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.