தலைவர்களை திரையரங்குகளில் தேட வேண்டாம்:
தமிமுன் அன்சாரி
தலைவர்களை திரையரங்குகளில் தேடுவதை தமிழர்கள் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டிணம் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவித்த தமிமுன் அன்சாரி,
நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சில ஆண்டுகள் மக்கள் பணிகள் ஆற்றிவிட்டு, அந்த அனுபவங்களோடு களத்திற்கு வரவேண்டும். மாறாக திரைப்பட கவர்ச்சையை மட்டுமே நம்பிக்கொண்டு, அதையே மூலதனமாக்கி அரசியலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் ஒன்றும் சினிமா அல்ல. விஷால் நேற்று வரை நடிகர் சங்கத்தில் மட்டுமே பணியாற்றிக்கொண்டிருந்தார். நடிகர் சங்கத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இன்று திடீரென்று ஆர்.கே.நகர் தேர்தலில் களம் இறங்குவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது பலவித சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது.
தலைவர்களை திரையரங்குகளில் தேடுவதை தமிழர்கள் தவிர்க்க வேண்டும். மக்களுக்கு தொண்டாற்றும் தலைவர்கள் களத்திலிருந்தே உருவாக வேண்டும். அவர்களைத்தான் மக்கள் அங்கீகரிக்க வேண்டும். நடிகர் விஷால் போன்றவர்கள் சினிமா மூலதனத்தோடு களத்திற்கு வந்தபிறகு, இதே மனநிலையில் ஏராளமானோர் வர விரும்புவார்கள். இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது. இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்