பணம் கேட்டு வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கிளி என்கிற சதீஷ் (வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் பாஜக வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக பதவி வகிப்பது தெரியவந்துள்ளது. பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நெடுஞ்சாலையில் வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் சதீஷ் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து விஜய் போலீசாரிடம் கொடுத்த புகாரில், ‘நான் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சதீஷ் தன்னை வழிமறித்து ஆபாசமாக பேசி வழிப்பறியில் ஈடுபட்டார்’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த புகாரின் பேரில் சதீஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். சதீஷ் மீது கொலை மற்றும் வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.