Skip to main content

20 வருடத்திற்கு வேலை இல்லை...ரயில்வே சதி அம்பலம்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

திருச்சி பொன்மலை ரயில்வே காலியிடங்களில் வட இந்தியர்களை நிரப்பு வதற்கெதிராக மறியல் போராட்டம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக மாறியது. அந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 ஹெல்பர் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வு முடிவின்படி, புதிதாக நியமிக்கப்பட்ட 528 பேரில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்கிற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே புதிதாக பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள திருச்சி ரயில்வே கோட்ட எம்.பி.க்கள் குழுத் தலைவர் திருச்சி சிவா, "நியமனம் தொடர்பாக குழுவுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை'' என்கிறார்.

 

railway



இரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் நம்மிடம், "இரயில்வே அப்ரண்டிஸ் தேர்வில் பொன்மலையிலும் போத்தனூரிலும் சேர்த்து மொத்தமாக 813 பழகுனர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. தமிழகத்திலிருந்து பெரிதாக யாருமே விண்ணப்பிக்கவில்லை. இந்த பயிற்சியின்போது தரப்படும் உதவித்தொகை மிகவும் குறைவு என்பதாலும், பயிற்சி மட்டுமே என்பதாலும் தமிழர்கள் ஆர்வம்காட்டவில்லை. இந்த வாய்ப்பு களுக்கு வடஇந்தியர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைதான்'' என்கின்றனர்.

 

politicians



வைகோ தன்னுடைய அறிக்கையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதைக் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் நம்மிடம், "இந்த ரயில்வே நிறுவன விதியில் விளம்பரம் என்கிற தலைப்பில் விதி எண் 110-ல் 4,600 ரூபாய் ஊதியத்திற்கும், அதற்கு கீழுள்ள பணியாளர் தேர்வுக்கும் அந்தந்த பிராந்தியத்தில் விளம்பரம் வெளியிட வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தொடர்புடைய பிராந்தியத்தில் போதுமானோர் விண்ணப்பிக்கவில்லை என்றால் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற பிராந்திய ரயில்வே வாரியத்தில் வெளியிடலாம்.


ஆனால் ரயில்வே வாரியம் இந்த விதியைப் பின்பற்றாமல் நாடு முழுவதும் விளம்பரம் வெளியிட்டதாலே பிற மாநிலத்தார் தெற்கு ரயில்வே வாரியத்தில் சேருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது கடைநிலை ஊழியர்களாக நியமனம் செய்ய 2393 முன்னாள் ராணுவத்தினரை சென்னை ரயில்வே தேர்வாணையம் தேர்வு செய்திருக்கிறது. இவர்கள் மாதாந்திர தொகுப்பு ஊதியம் பெறும் ஒப்பந்த தொழிலாளர்கள். இதனால் இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு தெற்கு ரயில்வேயில் இவர்கள் பணியாற்றுவார்கள்.

இதனால் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை குறையும். இளைஞர்களின் ரயில்வே பணிக்கான வாய்ப்பும் பறிபோகிறது. இந்தியாவிலேயே தமிழக கேரள பகுதிகள் அடங்கிய தெற்கு ரயில்வேயில்தான் மிக அதிக அளவு இந்த மாதிரியான ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனம் நடக்கிறது. ரயில்வே பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனத்தை எதிர்த்து மிகப் பெரிய அளவில், தெற்கு ரயில்வே முழுவதும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் போராட்டத்தை முன்னெடுக்கும்'' என்கிறார்.

வட மாநிலங்களின் ஊடே ரயில்போகும்போது, ரிசர்வ் செய்த இருக்கை களில் அப்பகுதி மக்கள் ஏறியமர்ந்துகொண்டு இறங்கமறுப்பர் என்று பேச்சுண்டு. இப்போதோ தமிழர்களுக்கான ரயில்வே வேலைகளிலும் ஏறியமரத் தொடங்கிவிட்டனர் வடஇந்தியர்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு ரயில்வேயில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் சீட்டுகளைப் இறுகப் பற்றிக்கொள்வதிலே அக்கறை செலுத்தும் மாநில ஆட்சியாளர்கள், மக்களின் பிரச்சினைகள் குறித்து எப்போது யோசிக்கப் போகிறார்கள் என்பதுதான் விடைதெரியாத புதிர். 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.