Skip to main content

பழக, பழக, மரணமும் புளிக்கும்... 

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
neet

 

 

 

உலகிலேயே மிகக்கொடூரமான விசயங்களில் ஒன்று மரணம். உயிர் மட்டுமே எல்லாவற்றையும்விட மேலானது. அதனால்தான் உயிரை துச்சமாக நினைத்து போராடும் ஒவ்வொரு பணியையும் நாம் உயர்த்திப் பார்க்கிறோம். ஆனால் தற்போது மரணம்கூட நமக்கு பழகி விட்டதோ என்ற கேள்வி எழுகிறது. மனிதனின் அடிப்படையின்படி, ஒரு விஷயம் தொடர்ந்து நடந்தால் இரண்டே எதிர்வினைகள் மட்டுமே நடக்கும். ஒன்று அது பழகிவிடும், இரண்டாவது அதன்மேல் ஒரு வெறுப்பு, சலிப்பு ஏற்படும். இப்படியான காலகட்டத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோம். முன்பு பெரிய வலியாக இருந்த பெட்ரோல் விலையேற்றம்கூட இன்று தினமும் உயர்வதால் பழகிவிட்டது. தற்போது தொடர் மரணங்களை நமக்கு காட்டி நம்மை உளவியல் ரீதியாக பழக்கப்படுத்த நினைக்கிறது அரசு, இதை அவர்கள் தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி நடப்பது என்னவோ அதுதான்.

 

 


கடந்த ஆண்டுகளில் பெரியளவில் மாறிய பல போராட்டங்களுக்கு காரணம் மனிதம் நசுக்கப்பட்டதுதான். போராட்டக்காரர்களுக்கு தாக்கப்பட்டது, மரணம் நிகழ்ந்தது போன்ற உளவியல் ரீதியான ஏதேனும் ஒரு பாதிப்புதான் அதைத் தொடர்ந்த ஒரு மாபெரும் போராட்டத்திற்கு வழிவகை செய்திருக்கும். இதற்கு ஜல்லிக்கட்டு, மாணவி அனிதா தற்கொலை போன்ற பல போராட்டங்கள் எடுத்துக்காட்டாய் கண்முன்னே வரும். 

ஆனால் தற்போது நீட் தேர்வு கொடுமையால் மாணவி பிரதீபா மற்றும் சுபஸ்ரீ உள்ளிட்டவர்களின் தற்கொலை என்பது வெறும் செய்தியாகவே நம்மை கடந்து செல்கிறது, மாணவி அனிதா இறந்தபோது கிளம்பிய எதிர்ப்புடன் ஒப்பிடும்போது. ஏனென்றால் மாணவி அனிதாவின் இறப்பு என்பது முதல் இறப்பு, அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவி பிரதீபா மற்றும் சுபஸ்ரீ உள்ளிட்டவர்களின் இறப்பு என்பது, நீட் தேர்வு நடந்தபோது ஏற்பட்ட இறப்புகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 13 பேரின் (அரசு கொடுத்த தகவலின் படி) இறப்பு இப்படி தொடர் மரணங்களுக்குபின் நிகழும் ஒரு மரணம். தொடர்ந்து மரணத்தை மட்டுமே செய்தியாக கேட்டுவந்த நமக்கு இதுவும் அவற்றில் ஒன்றாக கடந்து சென்றுவிட்டது.  வெகுஜன மக்கள் மத்தியில் அது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம். இதைவிட பெரியக் கொடுமை,  இவர்களின் இறப்பிற்கு உண்மையிலேயே இதுதான் காரணமா எனும் சந்தேகம்தான் சமூகத்தை அழிக்கும் முதல் ஆயுதம். 

 

 


மாணவி பிரதீபாவின் இறப்பிற்கு நம் மாநில கட்சிகளைத் தவிர வேறு யாரும் வருத்தம் தெரிவித்ததாக நினைவில்லை. தோசை சுட்டுத் தருவீர்களா எனக் கேட்கத் தெரிந்த பிரதமருக்கு, 13 பேரை சுட்டதைப் பற்றி பேசக்கூட மாட்டேன் என்கிறார். இன்று வரை பாரத பிரதமர் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. ஒருவேளை 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை முழுங்கிவிட்டுதான், தோசையை பற்றி கேட்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது பழக, பழக பால் மட்டுமல்ல, மரணமும் புளித்து விடுகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது...

 

 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.