Skip to main content

இளைஞர்களை எச்.ராஜா கைபிடித்து கூட்டிச் சென்றுவிடுகிறார்... - கரு.பழனியப்பன்  

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் "இதுதான் ராமராஜ்யம்" நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பனின் உரை...
 

karu palaniyappan suba vee



புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு முன்பு என் கல்லூரிப்பேராசிரியர் எனக்கு ஏழு முறை போன் செய்திருந்தார். நான் திருப்பி அழைத்து பேசினேன். "சுப.வீரபாண்டியன் புத்தக வெளியீட்டுக்கு போகிறாயா?" என்றார். "ஆம்" என்றேன். "அவர் சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கி விடுவார், நீ சீக்கிரமாகச் செல்" என்றார். சுப.வீரபாண்டியன் அவர்களும் என் ஆசிரியரும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். அதனால்தான் எனக்கு ஏழுமுறை போன் செய்துள்ளார். நான் வந்தவுடன் மெசேஜ் செய்தேன், 'மூன்று நிமிடத்திற்கு முன்பே வந்துவிட்டேன்' என்று. வரும்பொழுது "இது தான் ராமராஜ்யம்" புத்தகத்தை படித்துவிட்டு வந்தேன். முன்னூறு பக்கம் கொடுத்தாலும் படிக்கக் கூடியவர்கள்தான் கவிக்கோ மன்றத்திற்கு வருவார்கள். இது முப்பது பக்கம்தான், கண்டிப்பாக அனைவரும் படித்திருப்பார்கள். நமக்கு பெரியார் பிடிக்கும், சுப.வீ பிடிக்கும் என்று நினைத்து இந்தக் கூட்டத்துக்கு வந்தால், அரசியல் கூட்டத்திற்கு வந்த ரஜினி ரசிகன் மாதிரி ஆகிவிட்டது. சுற்றி சுற்றி இவ்வளவு செய்திகள் இருக்கின்றன. நமக்கு எதுவுமே தெரியலையேனு வருத்தப்படுறேன்.

இன்றைய சூழ்நிலையில் 'இது தான் ராமராஜ்யம்' போன்ற புத்தகங்கள் அவசியமாக உள்ளது. இதற்கு முன்பு பேசிய மணிகண்டன் சொன்னார், 'அம்பேத்கர் சிலை உடைப்பு ஒரு செய்தியாக மட்டும் உள்ளது' என்கிறார். இதுதான் இன்றைய சூழ்நிலையில் இளைஞனின் மனநிலை. அவனுக்கு எல்லாவற்றின் மீதும் ஆர்வம் உள்ளது. அவன் எங்கு வேண்டுமானாலும் வருவான், வர தயாராக உள்ளான். ஆனால் அப்படி வருபவர்களை எச்.ராஜா மாதிரியான ஆட்கள் முதலில் வந்து கைபிடித்து கூட்டிப்போய்டுறாங்க. 

 

periyar



எனக்கு இருபது வயதாக இருக்கும்போது, ஒரு செய்தி வந்தால் அது மறுநாள் செய்தித்தாளில் வரும். அதற்கு மறுநாள் அதைப்பற்றி ஒருவர் கட்டுரை எழுதுவார், மறுநாள் அதற்கு இன்னொருவர் அதற்கு எதிர் கட்டுரை எழுதுவார். அதன் பின்தான் அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் நால்வர் அமர்ந்து பேசுவார்கள். அப்பொழுது ஒரு செய்தி வெளியாகி நிதானமாக ஜீரணம் ஆவதற்கு இத்தனை நாட்கள் தேவைப்பட்டது. இப்பொழுது ஒரு செய்தி வந்துவிட்டால் அதனை உடனே ஒரு பதினாறு சேனல்களில் நான்கு பேர் அமர்ந்துகொண்டு பேசுகிறார்கள். இதில் எதைப் பார்ப்பது என்று தெரியவில்லை, சத்தமாகப்  பேசுவது எல்லாம் சரி என்பது போல தோணுது. ஆனால் அவர்கள் எல்லாம் பி.ஜே.பியை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் பேசும் கருத்துகள் பலமாக உள்ளது. முடிந்த பிறகு யோசித்துப் பார்த்தால் அதெல்லாம் தவறாக உள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு படம் பார்த்து விட்டு அவரவர் கருத்துக்களை பேசுவோம் அது காற்றோடு கரைந்துவிடும். இப்போது பார்த்தால் திரையரங்கிற்குச் சென்ற மூன்றாவது நிமிடமே, 'படம் மொக்கடா'னு சொல்லிவிடுகிறான். சமூகவலைதளத்தில் அவன் மொழி இவ்வாறாக உள்ளது. காரணம், அவன் படிக்கவில்லை. அதற்குள் எழுத வந்துவிட்டான். அதற்கு மேல் அவனால் யோசிக்க முடியாது. இந்த காலகட்டத்தில்தான் பெரியார் மிகவும் அவசியமாக உள்ளார். அவர்தான் அனைத்தையும் கேளுடா என்றார். பெரியார் தன்னுள் ஒரு கருத்தை வைத்திருப்பார். ஆனால் அவர் அனைவர் பேசுவதையும் கேட்பார். இந்த உலகத்தில் பெரியார் போன்ற ஒரு பகுத்தறிவுவாதி இனி பிறக்கவே முடியாது. பெரியார் ஒரு கருத்தை வைத்துக்கொண்டே இன்னொருவர் பேசுவதை கேட்பார். அவர் அலங்காரத் தமிழில் பேசவில்லையே தவிர அவர் பேசிய தமிழ் எல்லாம் அவ்வளவு அழகு. திருக்குறளை முதலில் திட்டியவர் பின் அதனை ஆதரித்தார். 'ஏன் முதலில் திட்டினீர்கள் இப்போது ஆதரிக்கிறீர்கள்?' என்று கேட்டால், 'ஆமா திட்டினேன். இவையெல்லாம் தவறு என்று அறிவாளிகள் சொன்னார்கள். இது பரிமேலழகர் என்ற ஒருவர் எழுதிய உரை. அவர் பல விஷயங்களையும் சேர்த்து எழுதிவிட்டார். அர்த்தம் இது இல்லை என்று சொன்னார்கள். அதனால் நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கடைக்குச்  செல்கிறோம். நூறு பொருள் இருக்கு, நூறையும் வாங்குவியா? தேவையான பத்து பொருளை மட்டும்தானே வாங்குவாய்?' என்றார். அந்த உதாரணம் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

பி.ஜே.பிக்கு குழப்பம் என்னவென்றால், 'தமிழ்நாட்டில் எழுபது சதவீதம் பேர் சாமி கும்பிடுகிறார்கள். அதில் அறுபத்தொன்பது சதவீதத்தினர் அதிதீவிரமாக கும்பிடுகிறான். ஆனால் பெரியாரை ஏதாவது சொன்னால் கோபப்படுகிறான்' என்பதுதான் பி.ஜே.பிக்கு உள்ள குழப்பமே. 'என்னடா இந்த ஆளு சாமி கும்பிடாதனாரு, காட்டுமிராண்டினாரு, சாமி சிலையை உடைத்தாரு.  அவரை சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறதே. இவனை நம்மில் ஒருவனாக மாற்றமுடியவிலையே' என்று. இன்று ஸ்மார்ட் போன் கையில் வைத்திருப்பவனுக்கு எல்லாம்  பெரியார் பற்றி தெரிகிறது. அவர் சாமி கும்பிடுவதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை என்று. இவர்கள் பெரியார் குறித்து மூன்று விஷயம் திரும்பத் திரும்பக் கூறுவார்கள். ஒன்று இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பது. அது பொறாமையில் சொல்வது, அதை தள்ளிவைத்து விடுவோம். அது தனிப்பட்ட விஷயம். அடுத்து இந்து மதத்தை மட்டும் கடுமையாக எதிர்த்தார், மற்ற இரண்டு மதங்களையும் கடுமையாக எதிர்க்கவில்லை என்பார்கள். 
 

h.raja



மூன்றாவது, அவர் பிள்ளையார் சிலையை உடைத்தார் என்பார்கள். இந்த பிள்ளையார் சிலையை உடைத்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிபதிக்கு பெரியார் பற்றி தெரியும் இந்த வழக்கிலிருந்து பெரியாரை விடுவிக்க வேண்டும் என்பதற்காக கேள்விகளை மாற்றி மாற்றி கேட்கிறார். பெரியார் தெரியாமல் கைதவறி விழுந்துவிட்டது என்று கூறுவார், நாம் விடுதலை செய்துவிடலாம் என்பதற்காக. பெரியார் பொறுமை இழந்து, "ஐயா நீங்க மடக்கி மடக்கி கேட்கிறீர்கள். நேரடியாக கேளுங்கள், பிள்ளையார் சிலையை உடைத்தாயா?" என்று. நீதிபதி கேட்கிறார். பெரியார் "ஆம் உடைத்தேன், தண்டனை கொடுங்கள். ஆனால் எனக்கு என்ன தண்டனை கொடுக்கிறீர்களோ, அதே தண்டனை அடுத்த வருடம் பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையாரை ஆற்றில், கடலில் கரைப்பவருக்கும் அளிக்கவேண்டும்" என்றார். அந்த நீதிபதி பெரியாரை விடுதலை செய்துவிடுகிறார். அந்த நீதிபதியின் பெயர் என்ன தெரியுமா? ராமன். 

பி.ஜே.பி இந்தியா முழுவதும் ஒரே பழக்கத்தைக் கொண்டு வர நினைக்கிறார்கள், ஏறத்தாழ வென்று விட்டார்கள். இரண்டு எம்.எல்.ஏ உள்ள இடத்திலும் அவர்கள்தான் ஆட்சி நடத்துகிறார்கள்,  எம்.எல்.ஏவே இல்லாத தமிழகத்திலும் ஆட்சி நடத்துகிறார்கள். இதற்கு அவர்கள் எல்லா இடத்திலும் இந்து, முஸ்லீம் வேற்றுமையை சொல்லிக்கொண்டே வந்தார்கள். அது வடஇந்தியாவில் எடுபட்டது. தமிழ்நாடு என்றும் தனி, நாம சொல்லவில்லை அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இங்கு அவன் புதிய திட்டத்துடன் வருகிறான். இந்து-பெரியார் என்று. அவர் இந்துவை எதிர்த்தவர், பிள்ளையாரை உடைத்தவர், முஸ்லீம் கிறிஸ்டீனை எதிர்க்காதவர், இந்துவை எதிர்த்தவர், வாருங்கள் நாம் ஒன்றிணைவோம் என்றான். பிள்ளை பிடிப்பவன் இந்த ரூபத்தில் இப்பொழுது வருகிறான். 

சினிமாவில் ஒரு நடிகர் என்னிடம் வந்து சொன்னார், 'எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் சினிமாவிலிருந்துதானே அரசியலிற்கு வந்தார்கள்' என்று. நான் கூறினேன், அவர்கள் அரசியலில் இருந்த பிறகுதான் சினிமாவிற்குள் வந்தார்கள் என்று. அவர், 'அப்படியா?' என்றார். உங்கள் பின்னால் ஊடகம் வந்துகொண்டிருக்கும் அரசியல் அனுபவம் பற்றி கேட்கும். ஆனால் நான் தேர்தல் முடிந்து அந்த மூன்றாவது நாள், வாக்கு எண்ணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். அப்பொழுது தெரியும் உங்களுக்கு  அரசியல் என்னவென்று. ஆனால், பெரியார் செய்த அரசியல் என்பது யாரையும் சாராமல், நான் யாரிடமும் சென்று ஓட்டு கேட்க மாட்டேன் என்று சொன்ன அரசியல். அது மிகப்பெரிய சாகசம். அதனால் முப்பது பக்கத்தில் போட்டிருக்கும்  'இதுதான் ராமராஜ்யம்' போன்று அல்லது அதையும் விட சிறிய புத்தகத்தை இன்னும் சுப.வீ போன்றவர்கள் போடவேண்டும். 

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.