Skip to main content

என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன்? நீதிபதியிடம் எம்.எல்.ஏவின் மணப்பெண் குமுறல்!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தைச்சேர்ந்த பவானிசாகர் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலளர் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன். இவருக்கும் கடத்தூரைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி ஆகியோரின் மகள் ஆர்.சந்தியா என்பவருக்கும் நிச்சயம் முடிந்து வரும் 12ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் ஆகியோர் தலைமையில் இவர்களது திருமணம் நடைபற இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ்களும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது. திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மணப்பெண் சந்தியா திடீரென மாயமானர் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து, எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோபிச்செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மணப்பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில் மணப்பெண் சந்தியா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சந்தியாவை அழைத்துச்சென்று இன்று மாலை 6.30க்கு கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

mlaaa


கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணப்பெண் சந்தியா நீதிபதி பாரதி பிரபாவிடம் கூறியதாவது,

எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், எம்.எல்.ஏ., என்று என் வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள். எனக்கும் நிச்சயக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கும் 20வயது வித்தியாசம் உள்ளது. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? இதனால் தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் நான் வீட்டை வீட்டு சென்றேன் என மணப்பெண் சந்தியா கூறினார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி பாரதி பிரபா, சந்தியாவிடம்.. நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என கேட்டபோது, நான் பெற்றோரிடமே செல்கிறேன் என சந்தியா கூறியுள்ளார். இதன்பின் பெற்றோரை அழைத்த நீதிபதி, சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என எச்சரித்தார்.

ஆளும் கட்சி எம்.எல்.ஏவான ஈஸ்வரனுக்கு வயது 43, ஆனால், மணப்பெண் சந்தியாவுக்கோ வயது 23 தான். திருமண பேச்சு தொடங்கியதில் இருந்து எனக்கு இவரை பிடிக்கவில்லை, மேலும் இவ்வளவு வயது வித்தியாசம் உள்ளவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சந்தியா பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
 

DSC03608


இதேபோல், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் சந்தியாவிடம் போனில் பேசும் போதெல்லாம்.. எனக்கு உங்களை பிடிக்கவில்லை. என்னை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் எம்.எல்.ஏ., ஈஸ்வரனோ.. திருமணம் உறுதியாகிவிட்டது. முதலமைச்சரே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைக்க போகிறார். உனக்கு இந்த மரியாதை என் மூலமாக கிடைக்கப்போகிறது என சந்தியாவை மிரட்டும் தொணியில் பேசியதோடு திருமணம் நடந்தே தீரும் என கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியே இல்லாமல் ஊரில் இருந்தால் திருமணம் நடந்தே தீரும்.. எப்படியாவது இதை தடுக்க வேண்டும் என விரும்பிய சந்தியா வீட்டை விட்டு கிளம்பி சென்றுள்ளார்.

சந்தியாவின் இந்த போராட்டம் அவரை ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் அதிகார மிரட்டலுக்கு சிக்காத பறவையாக விடுதலை பெற செய்துள்ளது.

 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.