Skip to main content

சம்பளத்துக்காக மட்டுமே போராடுறோமா? -ஜாக்டோ-ஜியோ போராட்டக் களம்!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
jactogeo

 

"இவுங்க பாக்குற வேலைக்கு இந்த சம்பளம் போதாதாக்கும்...''


""அரசு அலுவலகத்துல யாராச்சும் லஞ்சம் வாங்காம காரியம் பாக்குறாங்களா''


அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் எப்போது நடந்தாலும் சரி... இப்படி ஒரு பேச்சு பொதுமக்களிடம் வெளிப்படுவதும், அதனை அரசாங்கம் மற்றும் அரசு ஆதரவு ஊடகங்கள் மிகைப்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது.


அதுவும்போக, யாராவது ஒருத்தரைக் கொண்டு போராட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தின் மூலமாக தடையுத்தரவு பெறுவதும் சமீபகாலமாக அரசாங்கத்தின் புதிய பாணியாக மாறியிருக்கிறது.

 


அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல, நள்ளிரவில் கைது செய்து, பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். அதன் பலனை அடுத்துவந்த நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் அனுபவித்தார். அவர்தான், 2011-2016 ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களின் பென்சன் திட்டத்தை ரத்துசெய்தார். அது ஏற்படுத்திய எதிர்ப்பு உணர்வு காரணமாக, 2016 தேர்தலில் வெற்றிபெற்றால் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்காலமே அரசாங்கத்தின் பென்ஷனைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அத்தகைய வாழ்வாதாரத்தை மீட்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் ஜாக்டோ ஜியோ அமைப்பு காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியது. 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்களைக் கொண்ட இந்த அமைப் பின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். மதுரையில் போராடிய அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினார்கள். இதுகுறித்து, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பரசு, “""கைது நடவடிக்கைக்கு அஞ்சாமல் கோரிக்கை நிறைவேறும்வரை போராடுவோம்''’என்றார் நம்மிடம்.
jactogeo
ஏற்கெனவே, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதி போராட்டத்துக்கு தடை விதித்தது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அறிவித்தது.

அந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. விசாரணையில் அரசு சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிமன்றமே கருத்துத் தெரிவித்துள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் இப்போது ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுத்தேர்வு -நீட் தேர்வு தயாரிப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் போராட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கும்படி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல் மூலமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு 25-ஆம் தேதி அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அரசு ஊழியர்களை போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை அறிந்த பிறகு இந்த வழக்கை விசாரிக்க வசதியாக 29 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோவின் போராட்டம் குறித்த விமர்சனங்களை முன்வைத்து அவர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை விளக்கும்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் ஞானத்தம்பியிடம் பேசினோம்.…

 


""பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொடக்கப்பள்ளிகளின் தனித் தன்மையை ஒழித்து, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் அவற்றை இணைக்கக் கூடாது. அரசின் இந்த முடிவால் 3500 சத்துணவு மையங்கள் மூடப்படுவதை தடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடங்களை குறைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளுக்கு நியமிக்கும் (பணி இறக்க நடவடிக்கை) முடிவை கைவிட வேண்டும். அந்த வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து வேலைவாய்ப்பு வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகள் அனைத்தும் எந்தக் காலத்திலும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கானவை ஆகும். 9 கோரிக்கை களில் 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும்கூட அரசின் கடமையுடன் தொடர்புடையதுதான்.

ஆனால், எங்கள் கோரிக்கைகள் குறித்து இரண்டு ஆண்டுகளாக சாக்குப்போக்கு சொல்லியே காலத்தைக் கடத்துகிறது அரசு. நீதிமன்றம் அறிக்கை கேட்டால் சம்பளத்திருத்தம் தொடர்பாக குளறுபடியான அறிக்கையை வேண்டுமென்றே தாக்கல் செய்கிறது. அமைச்சருடன் பேச்சு நடத்தினால்... எங்கள் கோரிக்கை எதையுமே ஏற்காமல் இழுத்தடிப்பது, எங்கள் கோரிக்கை குறித்து கேட்கும் மனநிலை முதல்வருக்கே இல்லாதது என்று எங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் போக்கே நீடித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? மூன்றரை லட்சம் அரசுப்பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்பி புதிய வேலைவாய்ப்புகளை வழங்க அரசு முயற்சியே செய்யவில்லை. வேறு வழியே இல்லாமல்தான் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்''’’என்றார்.

ஜனவரி 24 அன்று கூடிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், தங்கள் போராட்டம் தொடரும் என்றும், 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தனர்.

-சோழன், அருண்பாண்டியன்
படங்கள் : ஸ்டாலின்


 

 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.