Skip to main content

’எங்களுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார்?’ -நாய்களின் காதலர் தின சிறப்பு பேட்டி!

Published on 13/02/2019 | Edited on 14/02/2019

 

dog marriage



பிப்ரவரி-14 என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்தான். மனசுக்குள்ள  ஷட்-டவுன் பண்ணி  வெச்சிருக்கிற காதலை ஹார்ட்டை  ஓப்பன்  பண்ணி  காண்பிக்கிற நாள். எவ்ளோ இம்பார்ட்டண்ட்  ஒர்க்கா  இருந்தாலும்  ஓரங்கட்டி  வெச்சிட்டு தங்களோட லவ்வர்ஸ்ஸோடு  டூயட் பாட எக்ஸைட்மெண்டோடு காத்திருக்கிற நாள். 


ஆனால், ‘காதலும் கிடையாது, கத்திரிக்காயும் கிடையாது. எல்லாம்  ஹார்மோன் செய்யும் கலகம்...வெறும் காமம்தான். காதலர் தினத்தனைக்கு ஜோடியாக சுத்துற காதலர்களை பார்த்தோம்னா  புடிச்சி  கல்யாணம்  பண்ணிவெச்சிருவோம் ஜாக்கிரதை’ என்று  சில  எமோஷனல்  குரூப்ஸ்கள்  கிளம்பி எக்ஸைட்மெண்டுக்கு 144  போட்டு காதலர்களில்  ஹார்ட்டில் அம்புவிடத்தொடங்கிவிடுவார்கள்.  அதுமட்டுமா? 


நாய்க்கும்  நாய்க்கும்  திருமணம்  செய்து  வைத்து ‘இளசுகளின் காதல் இப்படித்தான் இருக்கு’ என்று மீடியாக்களுக்கு பேட்டி  கொடுத்து  ஃபோட்டோவுக்கு போஸ்கொடுப்பார்கள்.  இதனால்,  காதலர்கள் அப்செட் ஆகிறார்களோ  இல்லையோ நாய்கள் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கும்.  நாய்களுக்கு  மட்டும்  வாய் இருந்திருந்தால் ஐ... மீன் பேசத்தெரிந்திருந்தால் என்னவெல்லாம் பேசியிருக்கும்? இதோ ஒரு இமாஜினேஷன் பேட்டி!


 

dog marriage




சென்னை  மெரினா  பீச்.  ஓரமாய்  உட்கார்ந்திருந்த ஓர் இளம் நாய் புஜ்ஜியிடம் காதலர்தினம் குறித்து நாம் பேசியபோது, சோகத்தோடு  வானத்தை  அண்ணாந்து பார்த்தது. ஃப்ளாஷ்பேக்காம்.  “என்பேரு புஜ்ஜி.  தெருநாய்ங்களுக்கெல்லாம் சோறு வெக்கிறதே பெரிய வி சயம். இதுல,  ஆரு பாஸ்  பேரு வைக்கிறா.  அவதான், எனக்கு செல்லமா  புஜ்ஜின்னு  பேரு வெச்சா. (விக்ரமன் படத்து  சோக  மியூசிக்குகளை  கற்பனை செய்துகொண்டு கேட்டுக்கொண்டிருந்தோம்) 
 

அவப்பேரு ஸ்வீட்டி.  பேருக்கேத்தமாதிரி  ரொம்பவே ஸ்வீட்டானவ.  ஒரே தெருவுலதான்  இருந்தோம்.  எப்பவுமே ஒண்ணா  விளையாண்டுகினுருப்போம். ஆரம்பத்துல ஃப்ரண்ட்ஸாத்தான்  பழகினோம்.   ஒருநாள் அவள பார்க்கலைன்னாலும் பகல் முழுக்க தூக்கமே வராது.  திடீர்னு எங்களுக்குள்ள  காதல்  பூ  பூத்துடுச்சி.  உங்க வூட்டு லவ்வு எங்க வூட்டு லவ்வு இல்ல.. ங்கொக்கம்மக்கா ஒலகமகா லவ்வு. அவள லவ் பண்ணல பாஸ்.  ஒரு மனைவியா  நெனைச்சித்தான் வாழ்ந்துனுருந்தேன். அவளும்தான்.
 

காதலுக்கு  இலக்கணமா  சொல்லுற ஆதாம்-ஏவாள்,    ரொமியோ-ஜூலியட்ஸ், அம்பிகாபதி- அமராவதி,  ஷாஜகான் -மும்தாஜ்  இவங்களையெல்லாம்  ஓவர்டேக் பண்ணி நம்ப லவ்வு  நம்பர் ஒன்  எடத்துல  இருக்கணும்னு  என் ஸ்வீட்டி அடிக்கடி சொல்லிக்கினேருப்பா.  ஆனா....” அதற்குமேல் புஜ்ஜியால்  பேசமுடியவில்லை.  கண்கள் குளமாகிறது.  நம் கையில் வைத்திருந்த  பிஸ்கட்டை கொடுக்க அதை கவ்வி சாப்பிட்டுவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு  மெல்ல பேசத் தொடங்கியது. 
“போன வருசம்  பிப்ரவரி-14  அன்னைக்கு  நானும்  என் ஸ்வீட்டியும்  ‘நாய்கள் ஜாக்கிரதை’ங்குற  சினிமாவுக்கு  போகலாம்னு  ரொம்ப  ஆசையா  ப்ளான் பண்ணிருந்தோம். 
 


யார்க்கும் தெரியாம அவளுக்காக  ஒரு  எடத்துல  வழிமேல விழிவெச்சி காத்துக்கினுருந்தேன்.  ஆனா, ரொம்பநேரம் ஆகியும்  அவ வரல.  வாழ்க்கையே வெறுத்துப்போச்சி. சினிமா டிக்கெட்டை  கிழிச்சிப்போட்டுட்டு  அவள  தேட ஆரம்பிச்சேன்.

 

dogs marriage


 

அவள காணோம். ஆனா,  என்னக்கொடும  சார்... ஈவ்னிங் நியூஸ் பேப்பரை பார்த்துட்டு என் இதயமே வெடிச்சிப்போச்சி. எவனோ ஒருத்தங்கூட  என்  ஸ்வீட்டியை உட்காரவெச்சு கல்யாணம் பண்ணிவெச்சிருக்காங்க.  மணக்கோலத்துல என் ஸ்வீட்டி உட்கார்ந்திருக்கிறதை பார்த்ததும்  சூஸைட் பண்ணிக்கப்போயிட்டேன் சார். ஆனா, என்னோட ஃப்ரண்ட்ஸுங்கதான்  என்னை காப்பத்திட்டாங்க.  ஏன் சார் இந்த மனுசங்க இப்படி இருக்காங்க? லவ் பன்றது தப்பா சார்?
 

லவ் ஃபெயிலியர் ஆன  அந்த காயம்பட்ட  வேதனையில இருக்கும்போதுதான்  அவ என்னைப்பார்த்து சிரிச்சா.  மீண்டும் ஒரு காதல் பூ பூத்துடுச்சி.  தயவு செஞ்சி  என் ஃபோட்டோவை எல்லாம்  போட்டுடாதீங்க சார்.  என் ஃபோட்டோவைப் பார்த்து என்னோட முதல் காதல்  தெரிஞ்சிடுச்சின்னா  இப்போ இருக்கிறவ உசிரையே விட்ருவா சார்” என்று சொல்லிவிட்டு  பீச் மணலிருந்து மெயின் ரோட்டைநோக்கி செல்கிறது புஜ்ஜி. 
 

தன் கணவரோடு  நின்றுகொண்டிருந்த ஒரு பெண் நாயின் சோகம்  நம்  இதயத்தை கனக்கவைத்தது.  “போனவருசம் என் பொண்ணு,  பக்கத்து தெருவுல இருக்கிற தன்னோட ஃபிரன்ட்ஸ்ங்களோட  விளையாடிட்டு வர்றேன்னு  சொல்லிட்டு போனா சார்.  ரொம்ப நேரம் ஆகியும் போனவள காணோம். வீடு திரும்பல. 
 

குடும்ப மானம் போயிடக்கூடாதுன்னு ரொம்ப ரகசியமா தேடுனோம். ஆனா,  என் பொண்ணுக்கு ஏதோ ஒரு நாயோட கல்யாணம் பண்ணிவெச்சி  சில மனுசங்க சுற்றி நின்னு கேவலமா பேசிக்கிட்டிருந்தை டிவியிலப் பார்த்ததும் கூட்டுல உசிரு இல்லங்க. 
 

அப்பவே நானும் என் கணவரும் தற்கொலை பண்ணிக்கப்போயிட்டோம். ஆனா, ரெண்டாவது பெத்துவெச்சிருக்கிற பொம்பளப்புள்ளையோட வாழ்க்கைய நினைச்சி தற்கொலை எண்ணத்தை மாத்திக்கிட்டோம். என் பொண்ணு  இன்னொரு  நாயை  லவ் பண்ணினதாவே இருக்கட்டுமே சார்.
 

அவங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்க பெற்றோர்கள்  நாங்க இருக்கோம். எங்க  உறவினர்கள் இருக்காங்க.  எங்க பொண்ணுக்கு  கல்யாணம்  பண்ணி வைக்க இவங்க யாரு சார்?  இவங்க,  என்ன எங்களோட உறவினர்களா? சில நாய்களுக்கு சரியான வயசு மெச்சுரிட்டி வந்திருக்காது. 


சில நாய்களுக்கு திருமணம்  பண்ணிக்கிற விருப்பம் இருக்காது. சில நாய்கள் ஏற்கனவே கல்யாணமாகி கர்ப்பமாக்கூட இருக்கும். டைவர்ஸ்கூட ஆகியிருக்கலாம். இல்ல ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்.  இல்ல... அண்ணன்  தங்கச்சி  உறவா இருக்கலாம்.


 

dogs marriage


 

இதையெல்லாம் பார்க்காம அவங்களோட விளம்பரத்துக்காக பொசுக்குனு  புடிச்சி கல்யாணம் பண்ணி வெக்கிறது என்னங்க நியாயம்?” என்று வாய் பொத்தி அழுகிறது தாய் நாய்!

தெருநாய்கள் அசோசியேஷன் ஆஃப் இண்டியாவின் தலைவர் ஜிம்மி நம்மிடம், “மனுஷங்களுக்கு நாங்க நன்றியுணர்வோட இருக்கோம். ஆனா, எங்கள பத்தி அவங்க கவலைப்படுறதில்லை சார். இந்த உலகமே காதலாலதானே சார் இயங்கிட்டிருக்கு. காதல், அன்பு, பாசம் இதெல்லாம் கட்டாயப்படுத்தியோ கெஞ்சியோ மிரட்டியோ வரவைக்கக்கூடியதல்ல. 


ஒருத்தர்க்கொருத்தர்  நெருக்கமா  பழக ஆரம்பிச்சபிறகுதான் அவரவர்களுடைய உண்மையான குணாதிசயங்கள் தெரிய ஆரம்பிக்கிது.  அப்படி,  தெரிய ஆரம்பிக்கும்போது இவன்(ள்) நம்ம லைஃப்க்கு  ஒத்து வரமாட்டான் (ள்)னு  புரிதலோடு பிரியுற நாளும்  இந்த காதலர் தினம்தான். அந்த நாளில் போயி அவங்களை புடிச்சி மிரட்டி தாலிகட்ட சொல்றாங்க… இந்த எமோஷனல் அமைப்புகள்.  இது,  எங்களுக்கு மட்டுமில்ல... மனிதக்காதலர்களுக்கும் இந்த கொடுமை நடக்குது.


இப்படி எங்களோட உரிமையில புகுந்து கும்மியடிக்கிறதுக்கு காரணம் மிருகவதை தடுப்புச்சட்டத்தின்படி  மனிதர்களுக்கு சரியான தண்டனை கொடுக்காததால்தான் மனிதர்கள் எங்களை அலட்சியமாக துன்புறுத்துகிறார்கள். 


தமிழ்நாடு காவல்சட்டத்தின்படி எங்களின் உரிமைகளை மீறி பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு  நடந்துகொள்வோரை கைது செய்து தண்டிக்கமுடியும். ஆனா, நாங்கள் வாய்பேசமுடியாமல் இருப்பதால் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. எங்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்  ப்ளூக்ராஸ் அமைப்பும் எங்களை வெச்சி அரசியல் பண்றாங்களே தவிர எங்களோட நலனில் எந்த அக்கறையும் காட்றதில்ல. காரணம், காதலர் தினத்தில் நாய்களுக்கு, கழுதைகளுக்குன்னு கல்யாணம் பண்ணி வெச்சு துன்புறுத்துருவங்க எல்லோருமே அவங்களோட ஆதரவாளர்கள்தான்.  

இப்படியே தொடர்ந்தால்... ப்ளூகிராஸ் அமைப்பு, காவல்துறை ஆணையர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு குரைத்து ஊளையிடும் போராட்டத்தை செய்வோம்” என்று எச்சரிக்கிறவர்... “லவ் பண்ணுங்க பாஸ் லைஃப்  நல்லா இருக்கும்” என்று புன்னகைத்து கைகுலுக்கி அனுப்பினார்.


மிருகங்களின்  காதலைக்கூட  புரிந்துகொள்ளமுடியாதவர்கள்... மனிதர்களின்  காதலை புரிந்துகொள்வார்களா?
 

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

‘கலைஞர் உலகம் அருங்காட்சியகம்’ - மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
kalaignar World Museum Tamil Nadu Government gave good news

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அவரது உடல் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி கலைஞருக்கு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி (26.02.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். அதன் பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் கலைஞர் நினைவிடத்தின் நிலவறையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை நாளை மறுநாள் (06-03-2024) முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது எனவும் இணையதளம் மூலம் அதற்கான அனுமதிச் சீட்டு பெற்றுப் பார்வையிடலாம் எனத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

kalaignar World Museum Tamil Nadu Government gave good news

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன் கலைஞரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் ‘கலைஞர் உலகம்’ என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 06-03-2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும். இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். ஒருவர் ஒரு அலைப்பேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

kalaignar World Museum Tamil Nadu Government gave good news

மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை.

kalaignar World Museum Tamil Nadu Government gave good news

நவீன தமிழ்நாட்டின் சிற்பி, தமிழ்த்தாயின் தவப்புதல்வன், ஓய்வில்லாமல் தமிழ் மக்களுக்காக உழைத்த கலைஞரின் பெருமையினைப் பறைசாற்றும் வகையில், நவீன மற்றும் புதுமையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத்தினைப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசிற்கும், அங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பினை நல்கி கண்டுகளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.