Skip to main content

எப்பொழுதும் ப்ளே பாய், சாக்லேட் பாய் இந்த காதல் மன்னன் தான்! -  ஜெமினி பைட்ஸ்  

Published on 22/03/2018 | Edited on 08/04/2018

 

மார்ச் 22  - ஜெமினி கணேசன் நினைவு நாள் 

இன்று ப்ளே பாய், சாக்லேட் பாய் என்றெல்லாம் இளைஞர்களைக் கூப்பிட்டாலும் இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்த வார்த்தை என்றால் அது காதல் மன்னன் தான். தமிழ் சினிமாவில் அரவிந்த்சாமி, அஜித், அப்பாஸ், மாதவன் என்று பெண்களின் சாக்லேட் பாய்ஸாக இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் சீனியராக இருந்தவர் காதல்மன்னன் ஜெமினி கணேசன்தான்.

gemin ganesan young



ஆசிரியர் டூ ஆக்டர் 

ஜெமினி கணேசன் 1920 ஆம் ஆண்டு திருச்சியில்  பிறந்தார். கல்லூரிப் படிப்பிற்காக சென்னை வந்தவர் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்தார். ஆனால் அந்த பணி ராமஸ்வாமி கணேசனுக்கு அவ்வளவு நிறைவாக இல்லை. ஜெமினியின் இயற்பெயர் ராமஸ்வாமி கணேசன். தனது கனவை அடைய ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக சேர்ந்தார். அதன் பின் 1947ஆம் ஆண்டு ஜெமினி நிறுவனம் தயாரித்து ராம்நாத் இயக்கிய 'மிஸ்மாலினி' படத்தின் மூலம் நடிப்புப் பயணத்தை ஆரம்பித்தார். 

கணேசனால் வந்த குழப்பம் 

ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேசன் என்றே இடம் பெற்றது. 'பராசக்தி' மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து 'ஜெமினி' கணேசன் ஆனார்.

 

gemini with savithri



காதலும் ஜெமினியும் 

தமிழ் சினிமாவில் சண்டை கற்றுக்கொடுக்க எம்.ஜி.ஆர் இருந்தார், நடிப்புக்கு சிவாஜி இருந்தார். காதலை கற்றுக்கொடுக்க  ஜெமினிதான் இருந்தார். இவருக்கு சினிமாவில் மட்டும் பல நாயகிகளுடன் நடிக்கவில்லை. நிஜ வாழ்விலும் நாயகிகள் அதிகம் தான். ஜெமினி கணேசனிற்கு மூன்று மனைவிகள், ஏழு பிள்ளைகள். இவரது மூன்றாவது மனைவி நடிகை சாவித்ரி. ஜெமினியும் சாவித்ரியும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதில் ஏற்பட்ட நட்பு தான் காலப்போக்கில் காதலாக மலர்ந்து, திரையில் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடிப் பொருத்தம் நிஜமானது.1954ஆம் ஆண்டு சாவித்ரியை  திருமணம் செய்துகொண்டார். ஜெமினி திருமணமானவர் என்று அறிந்தும் நடிகை சாவித்ரி 'மணம் முடித்தால் அது ஜெமினியுடன்தான்' என்று நின்று மணமுடிக்கும் அளவிற்கு ஜெமினியின் மீது காதல் வைத்திருந்தார் சாவித்ரி.

 

gemini family



'காம்போ' கதாநாயகன் 

தான் புகழ் பெற்ற நட்சத்திரம் ஆன பின்பும் சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் என்று அனைத்து நடிகர்களுடனும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நடித்தவர் ஜெமினிகணேசன். அதில் முக்கியமான திரைப்படங்கள் வீரபாண்டியன் கட்டபொம்மன், பாசமலர், பார்த்தால் பசி தீரும், சரஸ்வதி சபதம், கப்பலோட்டிய தமிழன் ஆகியவை. எம்.ஜி.ஆருடன் முகராசி திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் 1970க்கு பின் ஜெமினியின் படங்கள் இறங்கு முகமாக இருந்தது. மீண்டும் தனது இடத்தை குணச்சித்திர வேடங்களின் மூலம் பிடித்தார். 1988ஆம் ஆண்டு சீரஞ்சீவி நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில்  தெலுங்கில் வெளியான 'ருத்ர வீணா' திரைப்படத்தில் ஒரு கர்நாடக இசைக் கலைஞராக நடித்திருந்தார். அதே படம் தமிழில் கமல் நடிப்பில் 'உன்னால் முடியும் தம்பி' என்று வெளியானது. இதில் ஜெமினியின் கதாப்பாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

 

gemini with sivaji



அந்த கணேசன் தான் சரி...

கமல் நடிப்பில் வெளியான 'அவ்வை சண்முகி' திரைப்படத்தில் கமல் பெண் வேடம் போட்டிருப்பார். அந்த கதாபாத்திரம் தன் மனைவிபோல் இருப்பதாக எண்ணி  கமலிடம் காதலைக் கூறுவார் ஜெமினி. இந்தப் படத்தில் நடிக்க கமல் முதலில் அணுகியது சிவாஜியைதான் என்றும், 'இந்தக் கதாப்பாத்திரத்திற்கு சரியான ஆள் நானில்லை, காதல்மன்னன் ஜெமினிதான்' என்று சிவாஜி கூறியதாக கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கார்த்திக், கமல், சத்யராஜ், விக்ரம், விஜயகாந்த் என அடுத்ததலைமுறை நடிகர்களின் படங்களில் எந்த பாகுபாடும் இல்லாமல் நடித்த கலைஞர் ஜெமினி கணேசன்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 2005ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக உயிர்பிரிந்தார் ஜெமினி. இனிவரும் காலங்களில் எத்தனை நபர்களுக்கு காதல் மன்னன் என்று பட்டமளித்தாலும் ஜெமியின் இடத்தை நிரப்புவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.