Skip to main content

அதிமுகவை வழிநடத்தப்போவது சசிகலாதான்! மிகப்பெரிய அரசியல் சரிவில் EPS விழப்போகிறார்! -நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு!

Published on 19/01/2021 | Edited on 27/01/2021
dddd

 

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (18.01.2021) டெல்லி சென்றார். மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இன்று காலை மோடியை சந்தித்துப் பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். அரசியல் ரீதியாக எதையும் விவாதிக்கவில்லை, பேசவில்லை என்று அவர் சொல்லியிருப்பது அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.

 

பாஜக என்கிற கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் அதிமுகவை வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக ஏற்கவில்லை. இவர்தான் முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக வழிமொழிந்ததற்குப் பிறகு பாஜக அதனை வழிமொழியவில்லை. 

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லி தலைமை அறிவிக்கும் என்று அடுத்த நிமிடத்திலேயே அறிக்கை விட்டார் தமிழக பாஜக தலைவர். ஆனால் இன்றைக்கு அதைப்பற்றி எதுவும் பேசவில்லை, அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அண்டப் புழுகு என நான் சொல்வதற்கு காரணம், தேர்தல் தேதி அறிவிக்கிற நாள் நெருங்கி வருகிற காலக்கட்டத்தில் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கும், கோரிக்கைகளை வைப்பதற்கும் டெல்லி சென்றேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. திட்டங்களை நிறைவேற்றவும், கோரிக்கைகளை வைப்பதற்கும் இது உகந்த நேரமல்ல. 

 

ஆட்சியில் அந்திசாயும் நேரத்தில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி இனிமேல் தமிழ்நாட்டில் திட்டங்களைத் தொடங்கவும், அதனை நிறைவேற்றவும் காலம் வாய்ப்பு கொடுக்காது. பாஜகவும் அதை இவரிடத்தில் எதிர்பார்க்காது. ஆகவே இவர் என்ன நினைத்து அங்கு சென்றாரோ, நினைத்தது நடக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். திட்டமிட்டே முதலமைச்சர் ஒரு உண்மையை மூடி மறைத்திருக்கிறார். 

 

தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் குறித்துதான் பேசியிருந்தால் எந்த திட்டங்கள் குறித்துப் பேசினார். இன்று காலை பத்திரிகை செய்தி, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 19 ஆயிரம் கோடி என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய நிதி அமைச்சர் கூட்டத்தில் பேசியிருப்பதாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அந்த நிலுவைத் தொகை பற்றி எடப்பாடி பேசியிருக்கிறாரா? 

 

dddd

 

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறியிருக்கிறாரே? 

 

சசிகலா வந்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என்று சொல்வது, இவர் தப்பிப்பதற்காக சொல்லக்கூடிய வார்த்தைதான். சசிகலா வந்தால் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஒரு மிகப்பெரிய அரசியல் சரிவில் இவர் விழப்போகிறார். முதலமைச்சர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஆபத்து வரப்போகிறது. நன்றி கொன்ற மகற்கு உரிய தண்டனையை இவர் அனுபவிக்கப்போகிறார். அதனால் சசிகலாவை ஏற்க மனமில்லாத அருவடைய நிலையை அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறாரேயொழிய வேறொன்றும் இல்லை. 

 

சசிகலா சிறையில் இருந்து திரும்ப வந்ததற்குப் பிறகு அந்தக் கட்சியை வழிநடத்தப்போவது அவர்தான். அது நடக்கப்போகிறது. ஓ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அதற்கான வேலைகளில்தான் இப்போது கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியினுடைய அரசியல் அஸ்தமனமாகப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். 

 

சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என தெரிவித்திருக்கிறாரே? 

 

ஜெயலலிதா இருந்தபோதே அவர் அதிமுகவில் இருந்தாரா இல்லையா என்பது இப்போது கேள்வி அல்ல. சசிகலாதான் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை அழைத்து கலந்தாலோசித்து இவரை முதலமைச்சராக்கியவர். ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள்தான் தன்னை தேர்ந்தெடுத்தார்கள், சசிகலாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொன்ன அந்த நிமிடத்திலேயே இவர் நன்றி கொன்றிருக்கிறார் என்பதைவிட, நாளை நடக்கப்போவதை அனுமானிப்பதற்கான ஆற்றலும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.