Skip to main content

புறக்கணிக்கப்பட்ட ‘அயன் லேடி’ ஜெயலலிதா!

Published on 12/02/2018 | Edited on 12/02/2018

ஜெயலலிதா இருந்தபோதும் சரி, இறந்தபிறகும் சரி, அவரை மிகப்பெரிய திறமையாளர் என்றும், போல்டான பெண்மணி என்றும், எதற்கும் அசராத இரும்புப் பெண்மணி என்றும், பலமொழி அறிந்த அறிஞர் என்றும் சொந்தக் கட்சியினரும், அவரால் பலனடைந்தவர்களும், மீடியாக்களும் அள்ளிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

 

ஆனால், அவர் இறந்ததே மிகப்பெரிய மர்மமாக இன்னும் நீடிக்கிறது. இத்தனைக்கும் மத்திய அமைச்சர்கள் அப்போலோ மருத்துவமனையில் காவல் காத்தார்கள். வெளிநாட்டு மருத்துவர்களும், இந்தியாவின் உயரிய எஸ்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளித்த அந்த இரும்புப் பெண்மணியின் சாவிலேயே சந்தேகம் தெரிவித்தார்கள்.

 

75 நாட்கள் மருத்துவமனையிலேயே காவல் காத்து, அவ்வப்போது, ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்று மீடியாக்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்த அமைச்சர்களே இந்தச் சந்தேகத்தை எழுப்பினார்கள்.

 

மாநில ஆளுநர், மத்திய அமைச்சர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரையும் இவர்கள் சந்தேகக் கூண்டில் நிறுத்தினார்கள். ஆனால், அவர்கள் மட்டும் அந்தக் கூண்டிலிருந்து தப்பிக்க நினைத்தார்கள்.

 

எனினும், ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை மட்டுமே சிக்க வைக்கும் குறுகிய நோக்கத்தில் இவர்கள் யோக்கியர்களாக வேஷம் போட்டது வெட்ட வெளிச்சமாகத்தான் போகிறது.

 

அதற்கிடையே, இப்போது, அம்மாவின் பேரை நாரடித்துவிட்டு, இப்போ ரொம்ப நல்ல பிள்ளைகளாய் சட்டமன்றத்தில் படம் திறக்கிறார்கள். இந்த படத்தை திறந்துவைக்க மோடியைக் கூப்பிட்டாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை கூப்பிட்டாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் கூப்பிட்டாக, பக்கத்து மாநில முதல்வர்களையெல்லாம் கூப்பிட்டாக…

 jaya

 

ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் திறக்க வேண்டிய படத்தை சட்டமன்றத்தில் திறப்பதா என்று பதறிப்போய் மறுத்துவிட்டார்கள். இத்தனை நாள் காத்திருந்து, ஆட்சி முடிவதற்குள் தாங்களே திறந்து வைக்க முடிவு செய்தார்கள்.

 

தமிழக எதிர்க்கட்சிகள் யாருமே வரவேற்காத நிலையில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் அறுதிப் பெரும்பான்மைக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் மைனாரிட்டி எண்ணிக்கை உறுப்பினர்களே பங்கேற்று ஜெயலலிதா படத்தை திறந்து வைத்திருக்கிறார்கள்.

 

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்று, உயிரோடு இருந்திருந்தால் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்க வேண்டியவர் ஜெயலலிதா. அவருடைய படத்தை சட்டமன்றத்தின் மரபை மீறி சபாநாயகரே திறந்து வைத்திருப்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.

 

அரசுத் திட்டங்களிலும், அரசு விழாக்களிலும், அரசு அலுவலகங்களிலும் ஜெயலலிதா படம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஏற்கனவே நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்குத் தொடரப்பட்டு அதன்மீது தீர்ப்பு வரவேண்டியிருக்கிறது. அதற்குள் இப்போது சட்டமன்றத்திலேயே அவருடைய படத்தை திறந்து வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

 

இந்த நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்திருக்கிறார். ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். ஒரு குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்திருப்பது தமிழ்நாட்டின் அவமானம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.