Skip to main content

"என் சாதியைத் தெரிந்துகொண்டு வந்து என்னை விமர்சிக்கிறார்கள்..." - திவ்யாபாரதி

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

திவ்யாபாரதி... 'கக்கூஸ்' ஆவணப் படம் ஏற்படுத்திய அதிர்வுகளும் விவாதங்களும் தொடர்ந்துகொண்டே இருக்க, அதை எடுத்ததற்காக பல்வேறு விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்த அவர், அதைத்தாண்டி அடுத்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.

 

dhivya barathy



கடந்த ஆண்டு ஒகி புயலில் கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கடலுக்குள் சிக்கித் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென மீனவர்கள் குற்றம் சாட்டினர். ஒகி புயலின் போது மீனவர்கள் பட்ட துயரையும், அரசின் அலட்சியத்தையும் பேசும் 'ஒருத்தரும் வரேல' ஆவணப்படத்தை உருவாக்கிவிட்டார். 'கக்கூஸ்' படம் வெளியான பின்பு வந்த அச்சுறுத்தல்கள், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் வரத் தொடங்கிவிட்டன. அதிகாரத்தின் நடவடிக்கைகள் தாண்டி செயல்பாட்டாளர்கள் மீது பொதுவெளியில் வைக்கப்படும் விமர்சனங்கள், 'தலித் அல்லாதவர்கள் தலித்துகளின் பிரச்சனையைப் பேசுவது சரியானதாக இருக்காது' என்பதும் 'இப்போதெல்லாம் தலித்தியம் பேசுவது விளம்பரத்துக்காகவும் வருமானத்துக்காகவும்' என்பதுமாகும். இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் திவ்யாபாரதியின் பதிலைக் கேட்டோம்...

 

 

 


"தலித்துகளின் பிரச்சனையை தலித்துகள்தான் பேசவேண்டுமென்றால் சிறுபான்மையினர் பிரச்சனைகளை  சிறுபான்மையினர்தான் பேச வேண்டும், பெண்கள் பிரச்சனையை பெண்கள்தான் கையில் எடுக்க வேண்டும்... இதில் பெரிய சிக்கல் இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். நான் ஒரு கம்யூனிஸ்ட், பள்ளிகாலத்தில் இருந்து இடதுசாரி அமைப்பால் வளர்க்கப்பட்டவள். நான் சாதி, மத அடையாளங்களெல்லாம் கடந்து நான் ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் உணர்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் மீதான அக்கறையான உணர்வில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். கக்கூஸ் படத்தில் செய்யப்பட்ட விமர்சனத்தைக்கூட அடையாள அரசியலின் விமர்சனமாகத்தான் நான் பார்க்கிறேன். அந்தப் படத்தில் பிரச்சனையை நான் தவறாக காட்சிப்படுத்தியிருந்தால் சொல்லுங்கள். வெளியில் இருந்து வந்த ஆள், தவறான சிந்தனையில் காட்டியுள்ளேன் என்றால் கூட திருத்திக்கொள்ளலாம். ஆனால், விமர்சனமோ படத்தின் மீது இல்லாமல் என் மீதுதான் இருக்கிறது.

 

 

 

orutharum varela



கக்கூஸ் படத்தில் துப்புரவு தொழிலாளர்களை தவறாக காட்சிப்படுத்தியுள்ளேன், தலித் விஷயங்களில் புரிந்துகொள்ளாமல் செய்துவிட்டீர்கள் என்று இதுவரை என் மீது விமர்சனம் இந்த இரண்டு மூன்று வருடங்களில் வந்ததே இல்லை. நான் யாரு, என் சாதி என்ன என்று எங்கேயோ ஆய்வு செய்துவிட்டு வந்து, அதைப்பற்றி மட்டுமேதான் விமர்சனம் வைக்கப்படுகிறது. அப்போ நான் மீனவர் அல்ல அதனால் நான் மீனவர்களின் பிரச்சனையைப் பற்றி எடுக்காமல் இருக்க முடியுமா என்ன? இசுலாமியர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலை கண்டித்து நாளை ஒரு படம் எடுக்கலாம். அப்போது நான் இசுலாமியர் இல்லை, ஏன் இசுலாமியர்களை பற்றி எடுப்பீர்கள் என்று கேட்பீர்களா? என்னைப் பொருத்தவரை பெண்ணியம் என்பது பெண்கள் பேசுவது மட்டும் கிடையாது. எல்லோரும் பேச வேண்டும் என்பதுதான் என் பார்வை. இவர்களைப் பற்றியெல்லாம் படம் எடுக்கும்போது அதில் நேர்மை இல்லாமல் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆனால், பின்னணியை மட்டும் வைத்துப் பேசுவது என்னைப்  பொறுத்தவரை தேவையற்றது.

 

 


அதுபோல இந்தப் பிரச்சனைகளை நான் பேசுவது வியாபாரத்துக்காக அல்ல. எல்லா தரப்பு மக்களிடையேயும் என்ஜிஓக்கள் வந்துவிட்டன. அவர்கள்தான் அந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கலை ரீதியாக இந்தப் படங்கள் எனக்கு எதுவும் தரவில்லை. 'கக்கூஸ்' மற்றும் 'ஒருத்தரும் வரேல' படம் எடுத்தும் நான் பெரிதாக சம்பாரித்ததாக எனக்கு தெரியவில்லை. நான் சம்பாரித்தது வழக்குகள், கெட்ட பெயர், நெறுக்கடிகள், தலைமறைவு வாழ்க்கை இவ்வளவுதான். எனக்கென ஒற்றை ரூபா காசுகூட வரவில்லை. நான் இப்படி செய்வதில்லை, செய்பவர்களிடம் நீங்கள் கேட்கலாம் என்று நினைக்கிறேன்."




 

 

Next Story

புயல் எச்சரிக்கை எண்களுக்கு அர்த்தம் இதுதான்...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

புயல் எச்சரிக்கை எண்கள், புயலின் வேகத்தையும் அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அறிவிக்கும் ஒரு அளவீடு. இதன் அடிப்படையிலேயே கடலுக்கு செல்லலாமா, வேண்டாமா என மீனவர்கள் முடிவெடுப்பர்.
 

storm


இது மீனவர்களுக்கு மட்டுமான எச்சரிக்கை இல்லை, கடற்கரையை ஒட்டியுள்ள அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை. புயல் எச்சரிக்கை எண்களுக்கான அர்த்தம் இதுதான்...


புயல் எச்சரிக்கை எண் 1: புயல் உருவாவதற்கான வானிலை உள்ளது என அறிவிக்கும் சமிக்ஞை இது. செவ்வக வடிவிலான கூண்டு ஏற்றப்பட்டிருக்கும், இரவில் இரண்டு வெள்ளை நிற விளக்குகள் எரியும். தூரத்தில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இது குறிக்கும். 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
 

புயல் எச்சரிக்கை எண் 2: தூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை இது குறிக்கும். பகலில் செவ்வக கூண்டு செங்குத்தாக ஏற்றப்பட்டிருக்கும், இரவில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரியும். 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
 

புயல் எச்சரிக்கை எண் 3: இதில் இருந்துதான் பாதிப்புகள் சிறிது,சிறிதாக தொடங்கும். முதல் இரண்டு எண்களும் தூர அறிவிப்பாக இருக்கும். இது உள்ளூர்களுக்கான முன்னறிவிப்பு. பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்பதற்கான அறிவிப்பு. பகலில் முக்கோண வடிவ கூண்டு தலைகீழாகவும், இரவில் மேலே வெள்ளை விளக்கும், கீழே சிவப்பு விளக்கும் எரியும். 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

cyclone warning signs

 

புயல் எச்சரிக்கை எண் 4: 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் துறைமுகத்திற்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த ஆபத்து அவ்வளவு தீவிரமாக இருக்காது. அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான சமிக்ஞை பகலில் முக்கோண வடிவ கூண்டு, இரவில் மேலே சிவப்பு, கீழே வெள்ளை விளக்குகள். 
 

புயல் எச்சரிக்கை எண் 5: பகலில் மேலே முக்கோண கூண்டு தலைகீழாகவும், அதற்கு கீழே சீட்டு கட்டிலிருக்கும் டைமண்ட் வடிவிலான கூண்டும் ஏற்றப்பட்டிருக்கும். இரவில் மேலே இரு வெள்ளை நிற விளக்குகளும், அதற்கு கீழே ஒரு சிவப்பு நிற விளக்கும் எரியும். 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதிலிருந்துதான் அபாயம் தொடங்குகிறது. இதற்கான பொருள் துறைமுகத்தின் இடது பக்கம் புயல் கடந்துசெல்லும். புயல் கடக்கும் நேரத்தில் துறைமுக பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும்.
 

புயல் எச்சரிக்கை எண் 6: 5ம் எண்ணின் வேகம்தான் இருக்கும். ஆனால் துறைமுகத்தின் வலது பக்கம் புயல் கடந்துசெல்லும். புயல் கடக்கும் நேரத்தில் துறைமுக பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும். பகலில், முக்கோண கூடும் அதற்கு கீழே டைமண்ட் வடிவிலான கூடும் ஏற்றப்பட்டிருக்கும். இரவில் மேலே சிவப்பு விளக்கும், அதற்கு கீழே இரண்டு வெள்ளை நிற விளக்குகளும் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 7: 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதை உணர்த்தும் விதமாக மணல் கடிகார வடிவிலான கூண்டும், அதற்கு கீழே டைமண்ட் வடிவிலான கூண்டும் ஏற்றப்பட்டிருக்கும். இதற்கு பொருள் துறைமுகத்தை நெருங்கும் அல்லது கடந்துபோகும் புயலால் துறைமுகத்திற்கு கடுமையான வானிலை ஏற்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதாகும். இரவில் வெள்ளை, சிவப்பு, வெள்ளை என்ற வரிசையில் விளக்குகள் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 8: துறைமுகத்திற்கு இடதுபுறமாக கடந்துசெல்லும் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். பகலில் தலைகீழான முக்கோண கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் வெள்ளை, சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் விளக்குகள் எரியும். 90 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

cyclone warning signs


 

புயல் எச்சரிக்கை எண் 9: அதே வேகம்தான் ஆனால் துறைமுகத்திற்கு வலதுபுறமாக கடந்துசெல்லும் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். பகலில் முக்கோண கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் சிவப்பு, சிவப்பு, வெள்ளை என்ற வரிசையில் விளக்குகள் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 10:  துறைமுகத்திற்கு அருகிலோ அல்லது கடந்துசெல்லக்கூடிய கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். மணல் கடிகார வடிவிலான கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் சிவப்பு, வெள்ளை, சிவப்பு என்ற வரிசையில் விளக்குகள் எரியும். 120 முதல் 220 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். 
 

புயல் எச்சரிக்கை எண் 11: வானிலை எச்சரிக்கை மையத்தோடு இருந்த தகவல்தொடர்பு அற்றுப்போனது. மோசமான வானிலையால், மிக அதிகமான கேடு விளையலாம் என உள்ளூர் அலுவலர்கள் கருதுகின்றனர். என்பதுதான் இதற்கான பொருள். பகலில் மணிக்கூண்டு வடிவிலான கூடு ஏற்றப்படும், இரவில் ஒரேஒரு சிவப்பு விளக்கு மட்டும் எரியும்.

 

 

Next Story

ஒகி புயல் துயரங்களை உலகுக்கு சொன்ன ஊடகவியலாளருக்கு உயரிய விருது!

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

"இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கள் சொந்தங்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில், துயரம் கவ்விய கொந்தளிப்பான மனநிலையிலும் குமரிக் கடலோர கிராமங்களில் திரண்டிருந்த ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு சூடான சொற்கள் இருந்தன. தங்கள் துயரத்தை, பரிதவிப்பை அரசு எந்திரம் மட்டுமல்ல; கடற்கரைக்கு அப்பால் நிலப்பரப்பில் கேட்பதற்கு யாருமே இல்லையா என்று அவர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் இன்னும் செவிகளில் எதிரொலிக்கிறது. நடுக்கடலிலும் கடலோரத்திலும் மீனவர் வாழ்வின் துயரை, அவர்களது வாழ்க்கை பற்றிய புரிதலை, பரந்துபட்ட பொதுசமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் முயற்சியாக அது விரிவடைந்தது" - இவை ஊடகத்துறையில் சிறப்பாக இயங்கியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராம்நாத் கோயங்கா விருதை பெற்றிருக்கும் முதல் தமிழ் பத்திரிகையாளரான குணசேகரனின் வார்த்தைகள்.
 

gunasekaran news 18



ஒகி புயல் பாதிப்பில் பேரிழப்பை சந்தித்த கன்னியாகுமாரி மாவட்ட மக்களின் இழப்புகளையும், துயரங்களையும் தனது செயல்பாட்டால் அரசுக்கும் வெளி உலகுக்கும் கொண்டு சேர்த்த பணியை அங்கீகரித்து இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றும் குணசேகரன் 2017ஆம் ஆண்டு இறுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுழற்றிப் போட்டு, ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வை பாதித்த ஒகி புயலின் உண்மை நிலவரத்தை களத்தில் சிறப்பாகச் செயலாற்றி வெளிக்கொண்டுவந்தவர். கடலுக்குள் தொலைந்த மீனவர்களின் எண்ணிக்கை, மத்திய மாநில அரசுகளால் குறைத்தே கூறப்பட்ட போது, உண்மையான இழப்பை அம்மக்கள் வாயிலாகவே வெளிஉலகுக்குத் தெரிவித்தவர். சமூக நீதி பார்வை கொண்ட ஊடகவியலாளரான குணசேகரன், தன்னுடைய கனிவான பேச்சுக்குப் புகழ்பெற்றவர். அனல் பறக்கும் விவாதங்களில், எல்லை மீறும் சத்தங்களை சரியான இடத்தில் நிறுத்தி நிதானப்படுத்துபவர். தன் கருத்துகளை அழுத்தமாக அமைதியாகப் பதிவுசெய்பவர்.

 

news 18 gunasekaran receiving goyanka award



இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், அதன் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் நூற்றாண்டை முன்னிட்டு 2005ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, அச்சு ஊடகங்களுக்கான புலனாய்வு செய்திப்பிரிவில் 'தி இந்து' இதழின் விஜயகுமார் இந்த விருதைப் பெற்றுள்ளார். காட்சி ஊடகப்பிரிவில் புலனாய்வு செய்திக்காக இந்த விருது 'இந்தியா டுடே டிவி'யின் ஆனந்த் குமார் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. காட்சி ஊடகப் பிரிவில் பிராந்திய மொழிகளுக்கான சிறந்த ஊடகவியலாளருக்கான விருது குணசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே விருது அச்சு ஊடகப் பிரிவில் 'லோக்சத்தா' நிறுவனத்தின் நிஷாந்த் மற்றும் அசோக் ஆச்சார்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செய்திப்பிரிவில் NDTVயின் சுஷில் சந்திராவுக்கும் 'தி வயர்' சந்தியா ரவிஷங்கருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 29 ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.