Skip to main content

இடைத்தேர்தல் ஆட்சிக்கு ஆபத்தா? காய் நகர்த்தும் எடப்பாடி!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

ம்..பி. தேர்தலை விட எம்.எல்.ஏ. தொகுதிக்கான இடைத்தேர்தல் மீதுதான் அதிக கவனம் செலுத்துகிறார் எடப்பாடி. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலமின்றி மைனாரிட்டி அரசை நடத்தி வரும் எடப்பாடிக்கு இடைத்தேர்தலில் ஏற்படும் வெற்றி - தோல்விகள் எந்த வகையில் சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து சட்டமன்றத்தில் அவருக்கிருக்கும் வலிமையின் அடிப்படையில் ஆராய முடியும்.

eps-ttv


தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை. சட்டமன்றத்தில் தற்போது அ.தி.மு.க. - 114, தி.மு.க. - 88, காங்கிரஸ் - 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, சபாநாயகர் - 1, சுயேட்சை (தினகரன்) - 1 என 213 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மறைவு என 21 இடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்த நிலையில், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டிருப்பதால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் இல்லை என தெரிவிக்கிறார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு. ஆனால், வழக்குகள் இருந்தாலும் தேர்தலை நடத்த தடை எதுவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படவில்லை என சொல்லி, குறிப்பிட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வலியுறுத்தி சத்யப்பிரதா சாகுவிடம் புகார் மனு கொடுத்துள்ளது தி.மு.க. இதில் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை அணுகவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.

eps-ttvதேர்தல் ஆணையத்தின் முடிவுபடி 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடப்பதாக வைத்துக்கொண்டால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் பலம் 231 ஆக இருக்கும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்குத் தேவை. தற்போது அவரிடம் இருப்பது 114 எம்.எல்.ஏ.க்கள்தான்.

இந்த 114 எம்.எல்.ஏ.க்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் தோழமை கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பினை எடப்பாடி அரசு கோரினாலோ அல்லது எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வந்தாலோ குறிப்பிட்ட அந்த மூவரும் எடப்பாடியை ஆதரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், தங்களின் பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்று நினைத்தால் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்கவும் முடியும்.

அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்களில் தினகரன் ஆதரவு பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். தினகரனின் அறிவுறுத்தலின்படி, பதவி பறிபோனாலும் பரவாயில்லை என எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க முடியும். ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் 3 எம்.எல்.ஏ.க்களோடு இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால் 9 எம்.எல்.ஏ.க்கள் புதிதாக எடப்பாடிக்கு தேவை. இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றினால் எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் இல்லை. அதேசமயம், பதவி பறிப்புக்குப் பயந்து இந்த 6 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடியை ஆதரிப்பதாக இருந்தால் 3 இடங்களை மட்டும் கைப்பற்றினாலே போதும். ஆட்சிக்கு ஆபத்தில்லை!

இது ஒருபுறமிருக்க, இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தற்போது தி.மு.க. கூட்டணியில் 97 எம்.எல். ஏ.க்கள் இருக்கிறார்கள் (தி.மு.க. - 88 + காங்கிரஸ் - 8 + லீக் - 1). பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களில் 97 எம்.எல். ஏ.க்களை மட்டுமே தி.மு.க. வைத்திருப்ப தால் மேலும் 20 இடங்கள் தேவைப் படுகிறது. ஆனால், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் 18 தொகுதிகளையும் தி.மு.க. கைப் பற்றுவதாக வைத்துக்கொண் டால் தி.மு.க. கூட்டணி 115 எம்.எல்.ஏ.க் களுடன் வலி மையாக இருக்கும். இது, எடப் பாடியிட முள்ள 114 எம்.எல்.ஏ.க்களை விட 1 இடம் அதிகம். எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான சூழல் உருவாகிவிடும்.

அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ.வான தினகரனுக்கு மவுசு கூடும். அவர் தி.மு.க.வை ஆதரித்தால் எடப்பாடி ஆட்சி நிச்சயம் கவிழும். அதற்கு மாறாக, அ.தி.மு.க.வை அவர் ஆதரித்தால் 115 என்கிற எண்ணிக்கையில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சம பலத்துடன் இருக்கும். அப்போது தான், அ.தி.மு.க. உறுப்பினராக இருக்கும் சபாநாயகர் தனபாலுக்கு வாக்குரிமை கிடைக்கும். அவர் மூலம் கட்சியைக் காப்பாற்றுவார் எடப்பாடி.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிற நிலையில், அப்போது 21 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு ஏற்படுகிறது. அதேசமயம், மேலே குறிப்பிடப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் எந்த பிரச்சனையும் செய்யாத நிலையில் 4 தொகுதிகளை எடப் பாடி ஜெயித்தாலே போது மானது. அந்த 6 எம்.எல்.ஏ.க் களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பினால் மட்டுமே 10 தொகுதி களை கைப்பற்ற வேண் டிய நெருக்கடி எடப் பாடிக்கு உருவாகும். எல்லாக் கணக்குகளை யும் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.