Skip to main content

பாரத் பெட்ரோலியத்தின் இயக்குனர் தமிழிசை அவர்களே பெட்ரோல் விலை பற்றி பேசுங்கள்!

Published on 04/05/2018 | Edited on 05/05/2018

தற்போது அதிர்ச்சியளிக்கும் விஷயம் கர்நாடக மாநில தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்படாமல் உள்ளன என்பதுதான். கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப தினசரி பெட்ரோல், டீசல் விலைகள் மாறும் எரிபொருள் விலை என்ற புதிய முறை அமுல்படுத்தப்பட்டது.  

tamilisai

 


இதன்படி தினமும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றங்களை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வந்தன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை அறிவித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் 24-ஆம் தேதியிலிருந்து விலையை அறிவிக்காமல் உள்ளன. அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி விலையே தொடர்கின்றது.
பெட்ரோல், டீசல் தினசரி விலை மாற்றங்கள் அறிவிக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துள்ளனர். நிதியமைச்சக அதிகாரிகளோ எண்ணெய் விலை அறிவிப்பு விஷயத்தில் நிதியமைச்சகம் எதுவும் செய்ய முடியாது. அது நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட முடிவு என்று கூறுகின்றனர். இது வடிவேலு சொன்ன மாதிரி சின்னபுள்ளதனமாக இருக்கு.


இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த பெட்ரோல், டீசல் விலையை நிறுத்தி வைக்கும் முடிவானது மத்திய அரசின் அழுத்தத்தால்தான் எடுக்கப்பட்டது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. குஜராத் தேர்தலிலும் இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையை திட்டமிட்டு குறைத்தது. டிசம்பர் 14-ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் மீண்டும் விலை உயரத் தொடங்கியது. அப்போது எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைக்கச் சொல்லி மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆக பி.ஜே.பி அரசு தேர்தல் வெற்றிக்காக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் தலையிடுகிறது வெளிப்படையாக தெரிகிறது. குஜராத் தேர்தலின்போது பெட்ரோல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலைப்படி ஏறிக்கொண்டிருக்கும்போது, மாறும் எரிபொருள் விலைக்கு எதிராக செயற்கையாக விலையை குறைத்தனர். இதனால் தேர்தலில் வெற்றி பெற்றாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்தியாவில் மத்திய அரசே திட்டமிட்டு தேர்தலுக்காக எரிப்பொருள் விலை நிர்ணயத்தில் தலையிடுவது எந்த விதத்தில் சரியானது. அரசே இப்படி செய்தால் தனியார் எண்ணெய் நிறுவனங்களான ரிலைன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன், பிரிட்டீஸ் பொட்ரோலியம் இதே வேலையை செய்யாதா. 

 

petrol




இப்போது கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் உள்ளது. இன்னும் சில மாதங்களில்  கச்சா எண்ணெய் விலை இறங்க வாய்ப்புள்ளது. அப்போது நேர்மையான முறையில் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. இப்போது கூறப்படும் பெட்ரோல் விலை இறங்காது என்ற வாதம் தவறானது. கடந்த ஆண்டுகளில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பல ஏற்ற, இறக்கங்களை பார்த்துள்ளது. 2002 செப்டம்பர் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 26.70.பைசா. 2003 ஜனவரி ரூ. 33.50 பைசா. 2005 செப்டம்பர் மாதம் ரூ. 43.50, அடுத்த ஆண்டான 2006 செப்டம்பர் மாதத்தில் ரூ. 46.50. 2008 செப்டம்பர் ரூ. 50.60, அடுத்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் 2009 ஜனவரி மாதம் பெட்ரோல் விலை ரூ. 40.60 பைசா. 2012 மீண்டும் கச்சா எண்ணெய் ஏறுமுகமாக மாறியதால் அந்த ஆண்டு செப்டம்பர் ரூ. 68.50, மீண்டும் கச்சா எண்ணெய் சரிவினால் 2014 ஜூலை மாதம் ரூ. 54.70. 2008 டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் இல்லாத வகையில் விலை வீழ்ச்சியடைந்தது. அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பெட்ரோல், டீசல் விலை குறைக்காமல் ஏமாற்றி விட்டது. இப்போது முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் பெட்ரோல், டீசல் விலை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அடுத்து ஏறுமுகத்தில் கச்சா எண்ணெய் விலை மாறியதால் இந்த ஆண்டின் உச்ச விலையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.20 பைசாவானது. இப்படித்தான் பெட்ரோல் விலை பல ஆண்டுகளாக ஏறி இறங்கி வருகிறது.

 
இதில் வேடிக்கை என்னவென்றால் நமது அண்டை நாடுகளை விட இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.50.67 பைசா (விலை நிர்ணயம் செய்வது பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் கார்ப்பரேசன்), வங்காளதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.68.47 பைசா (விலை நிர்ணயம் செய்வது வங்காளதேசம் பெட்ரோலியம் கார்ப்பரேசன்), நேப்பாளில் பெட்ரோல் விலை ரூ.66.69 பைசா (விலை நிர்ணயம் செய்வது நேப்பாளம் ஆயில் கார்ப்பரேசன்), இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.49.67 பைசா (விலை நிர்ணயம் செய்வது சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசன்). நமது நாட்டின் எரிபொருள் விலையில் நேர்மையின்மை வைத்துக் கொண்டுதான் வல்லரசு கனவை கண்டுகொண்டிருக்கிறோம். பா.ஜ.க மாநில செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் இப்போது பாரத் பெட்ரோலியத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அனைத்து பரபரப்புகளுக்கும் பேட்டி தரும் இவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி பேசுவாரா?
 

 

 

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.