Skip to main content

கண்டெடுக்கப்பட்ட 13ம் நூற்றாண்டு கல்வெட்டும்.. கவனத்திற்கு வந்த தகவல்களும்

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

The 13th century inscription that was found.. and the information that came to attention

 

மானாமதுரை ஒன்றியம் பெரியகோட்டை தெக்கூர், சோழங்குளம் பகுதியில் உள்ள வேலூரைச் சேர்ந்த வேலாங்குளத்தில் 13ம் நூற்றாண்டு துண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு வழக்கறிஞர் கோவிந்தன், தனது சொந்த ஊரான வேலூரைச் சேர்ந்த வேலாங்குளம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடைத்திருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த சரவணமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது; “மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு வழக்கறிஞர் கோவிந்தன், தனது சொந்த ஊரான வேலூரைச் சேர்ந்த வேலாங்குளம் பகுதியில் முன்னோர்கள் வழிபட்ட கோவில் ஒன்று தரையோடு இருந்ததை  புதிய கட்டமைப்பு செய்ய முனைந்த போது அதில் தலை உடைந்த நிலையில் கிடைத்த இலட்சுமி நாராயணர் கற்சிற்பத்தை தலையை ஒட்டி அருகில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

 

துண்டுக் கல்வெட்டு:

கட்டமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டிய பொழுது முன்னும் பின்னும் சிதைவுற்ற துண்டுக் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதில் எட்டு வரிகள் உள்ளன. அதன் எழுத்தமைதியைக் கொண்டு 13 ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம். மாடக்குளம் கீழ் மதுரை என்ற சொல்லாலும் எதிராம் ஆண்டு கால வைப்பு முறையாலும் இது பாண்டியர் கல்வெட்டு என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால் எந்த மன்னரது கல்வெட்டு என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

 

The 13th century inscription that was found.. and the information that came to attention

 

கல்வெட்டு வரிகளாவன.

1. திரிபுவந சக்கரவர்த்தி
2. நெதிரா மாண்டு மேஷநா
3. பெற்ற அத்தத்து நாள்கி
4. மாடக்குளக் கீழ் மதுரை
5. ப்ராமணம் பண்ணிக்
6...ரை உக்க திருளிவித்து
7.கு எல்லையாவது கீழ் எ
8.கும் தென் எல்லை வைகை.

 

கல்வெட்டு முன்னும் பின்னும் சிதைந்துள்ளதால் முழுமையான பொருள் கொள்ள இயலவில்லை, நான்கு எல்லையில் தென் எல்லை வைகையாக குறிப்பிடப்பட்டுள்ளதாலும் பிரமாணம் பண்ணி எனும் சொல்லாலும் இது  நில தானத்தையும் அதற்கான எல்லையையும் குறிப்பிடுவதாக அறிய முடிகிறது. மேலும் இவ்விடமும் வைகைக்கு வடக்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் வரும் உக்க திருளிவித்து என்ற சொல் உகந்தருளிவித்து என்ற சொல்லாக இருக்க வேண்டும்.

 

முனியன் சாமி:

பழமையான கோவில் இடிமானத்திலிருந்து பெருமாளுக்கு உரிய சின்னமான திருவாழிக்கல் பொறிக்கப்பட்ட நிலைக்கல் ஒன்றை அருகிலேயே முனியன் சாமியாக இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். இவ்விடத்தில் கல்லால் செதுக்கப்பட்ட பெரிய சன்னலின் எஞ்சிய பகுதி ஒன்றும் காணப்படுகிறது. இவற்றைக் கொண்டு இவ்விடத்தில்  திருமாலுக்கான பெரிய கோவில் ஒன்று இருந்ததை அறிய முடிகிறது. மேலும் இப்பகுதி மக்கள் பெருமாளையும் அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பரையும் குலதெய்வமாக வணங்குகின்றனர். வேலூர் மற்றும் சோழங்குளத்தில் உள்ள மாயாவதாரன் நெற்களஞ்சியம், அருகில் உள்ள ஊரான ஸ்ரீரங்கநத்தம் போன்றவை பெருமாளோடு தொடர்புடையதாக உள்ளன. 

 

The 13th century inscription that was found.. and the information that came to attention

 

தீர்த்தம்:

இவ்வூர் மக்கள் அழகர் கோவிலில் உள்ள ராக்காச்சி அம்மன் தீர்த்தத் தொட்டியில் தீர்த்தமாடுவதை தங்களது விழாக்களில் முதன்மையானதாகக் கொண்டுள்ளனர். மேலும் இவர்களில் பலர் தீர்த்தம் என்னும் பெயரை இன்றும் தொடர்ச்சியாக வைத்து வருகின்றனர். இவை இவர்களுக்கும் பெருமாளுக்குமான தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

 

மண்பானை ஓடுகள்:

இக்கோவில் அமைந்துள்ள பகுதி மேட்டுப்பகுதியாக உள்ளதோடு இப்பகுதியில் பழமையான பானை ஓடுகளும் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளும் காணக் கிடைக்கின்றன. இக்கல்வெட்டு கிடைக்கப்பெற்ற இலட்சுமி நாராயணர் கோவில் புதிய கட்டுமானப் பணி மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் தலைமையிலான குழுவினரால் நிறைவுற்று விரைவில் குடமுழுக்கும் காணவிருக்கிறது” என்று தெரிவித்தார்.

 

 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.