![Vels Film International company listed his upcoming movies](http://image.nakkheeran.in/cdn/farfuture/k9l1hWAakBHww715FlEKcdOiAKIdmzPVzs3OHhexM4s/1679564915/sites/default/files/inline-images/296_11.jpg)
தமிழ் சினிமாவில் 'தேவி', 'எல்.கே.ஜி', 'கோமாளி' என பல்வேறு படங்களை தயாரித்துள்ள நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். இப்போது ஹிப் ஹாப் ஆதியின் 'பி.டி சார்', வருண் நடிக்கும் ஜோஷ்வா, இமை போல் காக்க உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் பங்கு சந்தை வர்த்தகத்தில் கால்பதித்துள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பங்கு சந்தை தொடர்பான பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள்.
மேலும் நடிகர்கள் சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, ஹிப்ஹாப் ஆதி, ஆரி அர்ஜுனன், ஆரவ், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி, பேரரசு, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, கௌரவ் நாராயணன், நடிகை சங்கீதா கிரிஷ், இயக்குநர்கள் கோகுல், ஏ.எல்.விஜய், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் என திரையுலகினர் வருகை தந்தனர்.
இந்நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன தலைவரான ஐசரி கே கணேஷ் பேசுகையில், ''கிட்டத்தட்ட 45 ஆண்டுக்காலமாக எனக்கு தமிழ் திரையுலகத்துடன் தொடர்பிருக்கிறது. நான் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ‘வாக்குமூலம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன். தயாரிப்பு மட்டுமல்ல 25 முதல் 30 திரைப்படங்கள் வரை நான் நடித்திருக்கிறேன். 25 படங்களை தயாரித்திருக்கிறேன். எனவே திரைத்துறையில் நல்ல அனுபவத்தையும், திரைத்துறையினரிடத்தில் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன். இதன் காரணமாக தற்போது பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட உள்ளோம்.
எங்களது நிறுவனம், திரைப்படத் தயாரிப்புகளில் மட்டுமல்லாமல் திரைப்படத்தின் விநியோகம் மற்றும் திரையரங்கத் திரையிடல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. எங்கள் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரூவில் படப்பிடிப்பு வளாகம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடனான உள்ளரங்கத்துடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவினை உருவாக்கி இருக்கிறோம். ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருக்கிறது. இந்த ஜாலிவுட் எனப்படும் பொழுதுபோக்கு சாகச பூங்காவின் 77 சதவீத பங்குகளை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் பெற்றிருக்கிறது. இது இந்தியாவிலேயே தலைசிறந்த தீம் பார்க்காக திகழும்.
ஜெயம் ரவி - ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் பான் இந்திய திரைப்படம் ஒன்றும் தயாராகிறது. இதனை இயக்குநர் பா.விஜய் இயக்குகிறார்'' என்றார்.