Skip to main content

"இது என்ன உலகம்..." - கவலையுடன் அழுத வேதிகா

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

vedhika about Marshall and Millions dog case

 

லண்டன் லூயி டர்ன்புல் என்ற நபரின் இரண்டு நாய்களின் பெயர் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ்  (Marshall and Millions). இந்த இரு நாய்களும் ஒரு பெண்ணை தாக்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த 7 ஆம் தேதி அந்த இரு நாய்களையும் அதன் உரிமையாளரையும் போலீசார் துரத்தி பிடிக்கின்றனர். அப்படி ஒரு இடத்தில் பிடிக்க அந்த உரிமையாளரிடம் போலீசார் கேள்வி கேட்க தொடங்குகின்றனர். உடனே அவரது இரு நாய்களும் போலீசை நோக்கி கத்த தொடங்கியுள்ளது. அப்போது கையில் துப்பாக்கி வைத்திருந்த போலீசார் அந்த இரு நாய்களையும் கொடுமையாக சுட்டுக் கொன்றுள்ளனர். இவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. 

 

பின்பு அந்த உரிமையாளரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் அந்த வீடியோ வைரலாகப் பரவ அந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 7 போலீஸையும் வேலையை விட்டு தூக்கச் சொல்லியும் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ நாய்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை வேதிகா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

 

இந்த வீடியோவில் அந்த சம்பவம் குறித்து பேசிய அவர், "ஒரு நாய் மற்றொரு நாயை பார்த்தால் குரைக்கும். இது இயற்கை. அதைத்தான் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் ஒரு பெண் உரிமையாளரின் நாயை பார்த்து குரைத்துள்ளது. அதை யாரோ போலீசிடம் சொல்லியுள்ளனர். இதனால் 7 முதல் 9 பேர் கொண்ட போலீசார் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸை துரத்தி பிடிக்கின்றனர். போலீசார் சுற்றி வளைத்தவுடன் அந்த நாய்கள் குழம்பிப் போய் ஏன் இவர்கள் கையில் துப்பாக்கியுடன் நம்மை துரத்துகிறார்கள் எனக் குரைத்திருக்கிறது.  அந்த நாய்கள் ஒரு மன அழுத்தமான சூழலில் இருந்துள்ளன. அப்போது மார்ஷல் என்ற நாயை தலையில் சுட்டுள்ளனர் போலீசார். அதைப் பார்த்த மற்றொரு நாய் வேகமாகக் குரைக்கிறது. அது குரைப்பதை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. பின்பு தப்பிப்பதற்காக ஓடுகிறது. அப்போது அந்த நாயையும் சுட்டுக் கொன்று விடுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்து தான் நானும் பேசுகிறேன். நானாக எதையும் கதை கூறவில்லை. 7 போலீசார் சுற்றி நிற்கும் போது அந்த நாய்களுக்கு என்ன புரியும். அதுங்களுக்கு என்ன தெரியும். 

 

எப்படி போலீஸ் நாய்களை சுடலாம். அந்த நாய்களின் உரிமையாளர் வீடில்லாதவர். வீடில்லாதோர் என்பதற்காக என்ன வேணாலும் செய்யலாம் என போலீஸ் நினைத்து விட்டார்களா. நான் அந்த போலீசிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலையில் அங்குள்ள ஒரு போலீசுக்கு கூடவா பொறுமையாக இருக்க வேண்டும் எனத் தோன்றவில்லை. அந்த நாய்கள் பயந்து போய் இருக்கின்றன. அது ஏன் அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் சுட்டுக் கொன்றதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது என்ன உலகம். எந்த ஒரு காரணமுமின்றி இரு அப்பாவி நாய்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டது. அதிகாரத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்தக்கூடாது. இந்த சம்பவம் ஒரு கொடூரமான, வன்முறை வெறியாட்டம்" எனக் கவலையுடன் அழுதபடி பேசியுள்ளார். மேலும் அந்த போலீசாருக்கு எதிராக புகார் அளிக்கும் லிங்க்கை பகிர்ந்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்