![There is no protection for women in Tamil Nadu; Khushbu speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/I_LQlm-xO84W6Vg5Aha40TVl19_qkkp5pm7FYdS1sCU/1673605940/sites/default/files/inline-images/Kus1.jpg)
தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இப்பொழுது சின்னதிரை சீரியல் நடிகையாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக, சினிமா தயாரிப்பாளராக பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறார். அத்தோடு அரசியலிலும் நுழைந்து கழகங்களிலும் இயக்கங்களிலும் பயணித்தவர் தற்போது பாஜகவில் இணைந்து பயணித்து வருகிறார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி பெற்று பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குஷ்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பத்திரிகைகளில் தினமும் வரும் செய்திகளே இதற்கு சாட்சி. தமிழகத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்களை மூடிக்கொண்டு எதுவுமே நடக்கவில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரது செயலும் அப்படித்தான் இருக்கிறது.
சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். எனவே, பெண்களுக்கு எதிரான குற்றம் எங்கே நடந்தாலும் முறையாக விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் எழுதிக் கொடுத்ததைத்தான் கவர்னர் படிக்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல. சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாகப் பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதற்கு முன்பு இதே பொன்முடி அரசு பஸ்சில் பெண்களுக்கான இலவசப் பயணம் குறித்தும் இழிவாகப் பேசி உள்ளார். அப்போதும் அவர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாகப் பேசுவது, அவமரியாதை செய்வது தான் திராவிட மாடலா?