![gdssdb](http://image.nakkheeran.in/cdn/farfuture/IrH4FokNR3xIXGY3g130yVQ5EC2ynfU0-YCdlI-Oy8w/1627374335/sites/default/files/inline-images/449ddd19-5af6-4448-b9c3-f6645d73cdef.jpg)
இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் என தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். அந்த வகையில், திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் இன்று (27.07.2021) சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
அப்போது, கனடாவைச் சேர்ந்த ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான சுரேஷ் ரோஹின் அவர்களின் ஏற்பாட்டில் அனுப்பிவைத்திருந்த ஒரு கோடியே இருபது இலட்சம் மதிப்பிலான 14 Portable Ventilator கருவிகளை அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து வழங்கும் பொருட்டு அவற்றை உதயநிதி ஸ்டாலினிடம் தங்கர் பச்சான் இன்று ஒப்படைத்தார். அண்மையில் கடலூர் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டின் காரணமாக உயிரிழந்த கரோனா நோயாளியின் சம்பவத்தை கனடா நண்பருடன் பகிர்ந்துகொண்டதால், அவர் இந்தக் கருவிகளை வாங்கி அனுப்பிவைத்ததாக தங்கர் பச்சான் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகிநீடுவும் உடன் இருந்தார்.