'சூரரைப் போற்று' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, 'சூர்யா 40' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்றது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள நடிகர் சூர்யா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதனால் சூர்யா இல்லாத காட்சிகளைப் படக்குழு படமாக்கிவந்த நிலையில், 'சூர்யா 40' படக்குழுவினரோடு நடிகர் சூர்யா சமீபத்தில் இணைந்துகொண்டார்.
இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா 2ஆம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், 'சூர்யா 40' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கவுள்ள நிலையில், 'சூர்யா 40' படத்தை 2022 பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியானது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது "எதற்கும் துணிந்தவன்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ரசிகரகளிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்று வரும் இந்த வீடியோ போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.