![Subramaniam Siva](http://image.nakkheeran.in/cdn/farfuture/NWR2CWnUMod_IOeQWFZSOtO2JkfpVQU1mB_ebXkWEDM/1653485234/sites/default/files/inline-images/74_24.jpg)
21 வயதேயான அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து உருவாகியிருக்கும் படம் ’மாலைநேர மல்லிப்பூ’. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஓர் இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதேயான மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவை மிக ஆழமாகப் பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசுகையில், “ஊரில் ‘டேய் இதெல்லாம் சின்னப் பசங்க பாக்குற வேலையாடா?' என்று பேசுவார்கள். ஆனால் இது போன்ற படங்களை சின்ன வயதில்தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் காமம், காதல் சின்ன வயதில் வந்தால்தான் சரி. ஒரு வயதுக்கு மேல் காதல், காமம் வந்தால் அது மனநோய். எனவே அந்த வயதிற்கான படத்தையே சஞ்சய் நாராயணன் எடுத்திருக்கிறார். நம் தமிழ் திரையுலகின் கமர்சியல் மாஸ்டர் என்றால் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார்தான். அவர்களுடைய பாராட்டு இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக புள்ளியல் விவரம் கூறுகிறது. இதற்கு முழுக் காரணம் வறுமை. இதனால் பாதிக்கப்படும் ஆண் வன்முறையை நோக்கியும் பெண் பாலியல் தொழில் நோக்கியும் போகிறாள். பாலியல் தொழில் என்பது ஆதித் தொழில். பைபிளில் இது குறித்த கதைகள் இருக்கின்றன. நம்முடைய தமிழ் புராணமான சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி கதாபாத்திரம், புகார் நகரில் இருந்த பெரிய பாலியல் தெருக்கள் போன்ற குறிப்புகள் எல்லாம் நாம் அறிவோம். ஆக அப்போது இருந்த ஒரு ஆதித் தொழில் இன்றைய 5G யுகத்தில் எப்படி இருக்கிறது என்பதைத் தான் இயக்குநர் கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு சமூகத்திலும் பெண் என்பவள் மிகவும் வலிமையானவள்; அவளை நாம் அடக்கித்தான் வைத்திருக்கிறோம். அவள் தாயோ, மனைவியோ, மகளோ, தோழியோ நாம் அடக்கித்தான் வைத்திருக்கிறோம். இப்படத்திலும் அப்படித்தான். வலிமையான தாய் தன் மகனின் சிறந்த எதிர்காலத்திற்காக எப்படி போராடுகிறாள் என்பதே கதை. முதல் படத்திலேயே இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இப்படம் நிச்சயமாக பேசப்படும் என்று நம்புகிறேன். இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் மிகப் பெரிய வாழ்த்துகள்” எனக் கூறினார்.