![Sarathkumar interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/ndRZYaq6zzVIlxadXjqp4p5NSN7kebh8gMqwp53qR8A/1686052055/sites/default/files/inline-images/Sarathkumar.jpg)
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வருகிற ஜூன் 9 அன்று 'போர் தொழில்' திரைப்படம் வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் படத்தைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
சரத்குமார் பேசுகையில், "இயக்குநர் இந்தப் படத்தை கூறிய விதம் எனக்கு புதுமையாக இருந்தது. அதுவே என்னை இந்தப் படத்தில் நடிக்கத் தூண்டியது. இந்த படத்தில் ஒரு இன்வெஸ்டிகேஷனை எப்படி கையாளனும் என்று ஒரு தீவிரமான முதன்மை காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் நடித்த இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட நேரம் தவறி படப்பிடிப்புக்குச் சென்றது இல்லை. அந்த எண்ணம் என் தந்தையிடம் கற்றுக்கொண்டது. அது இப்போது என்னிடமும் ஊறிப்போன ஒன்றாகும். நான் இந்த நிலைமைக்கு வருவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை.
மேலும், நான் நடித்த படங்களான தசரதன், நட்புக்காக போன்ற படத்தையே வேறு மாதிரி இப்போது எடுக்கலாம். அந்த அளவுக்கு புதுமையான கதையம்சம் கொண்ட படமாகும். இப்போது உள்ள சினிமாவில் ஹீரோ யார் என்பதைத் தாண்டி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்கிறாரா என்று தான் மக்கள் விரும்பி பார்க்கின்றனர். நான் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். அதே போல தான் போர் தொழில் படத்தின் இயக்குநரையும் தேர்வு செய்தேன். ஏனென்றால் அவர், படத்தை பற்றி கூறும்போதே இந்த படத்தை சரியாக எடுக்கும் திறமை அவருக்கு இருக்கிறது என்று நான் புரிந்துகொண்டேன்.
நான் சமூக வலைத்தளங்களை அதிகளவு பயன்படுத்த மாட்டேன். அதற்குண்டான நேரமும் எனக்கு இல்லை. இப்போது உள்ள சமூக வலைத்தளங்களில் விமர்சனம் என்பதைத் தாண்டி நிறைய தனிநபர் தாக்குதல் நடக்கிறது. இதைப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆவதற்கு பதில் அதை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. எனது தந்தைக்கு நான் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் நடித்த படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அந்த கனவை நிறைவு செய்துவிட்டேன். மேலும் எனது நிஜ வாழ்க்கையில் நிறைய போலீசார்களை பார்த்து வியந்துள்ளேன்" என்று கூறினார்.