உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் இந்தக் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு நாடுகள் ஒவ்வொருவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியா ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதிக்கு நீட்டித்துள்ளது. இதனால் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேறுவோரை காவல்துறை கைது செய்கின்றனர்.
![salman khan](http://image.nakkheeran.in/cdn/farfuture/2PLdVfw6VDsKAyLSN5khkUfr8Nep1wfTfYwjsKPleQM/1587102744/sites/default/files/inline-images/salman%20khan_0.jpg)
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பேசுகையில், “வெளியே செல்லாதீர்கள், கூட்டம் கூட்டாதீர்கள். குடும்பத்துடன் இருங்கள். நமாஸ், பூஜை என எதுவாக இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே செய்யுங்கள் என்று அரசாங்கம் கூறியுள்ளது. உங்கள் குடும்பத்தைச் சாகடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் வெளியே வாருங்கள்.
வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டுமென்றால் உரிய பாதுகாப்புடன் வாருங்கள். கரோனா தொற்று இருக்கும் நபரின் வலியைப் புரிந்து கொள்ளாதவர்கள் மனிதத்துக்கு எதிரானவர்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த பல மணிநேரம் உழைக்கின்றனர். அவர்கள் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து வீட்டிலேயே இருங்கள். நீங்கள் வெளியே நண்பர்களோடு செல்லாமல் இருந்தால் போலீஸ் ஏன் உங்களை அடிக்க வேண்டும்? அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது என நினைக்கிறீர்களா?
![http://onelink.to/nknapp](/sites/default/files/inline-
images/500x300-article-inside-ad-gif.gif)
உங்கள் உயிரைக் காப்பாற்ற உழைக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர்கள் மீது கல்லெடுத்து அடிக்கிறீர்கள். கரோனா தொற்று இருப்பவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடுகின்றனர். எங்கு ஓடுகிறீர்கள்? வாழ்வை நோக்கியா, சாவை நோக்கியா?
சீனாவில் ஆரம்பித்த கிருமி சீனாவில் இப்போது இல்லை. ஆனால் சில கோமாளிகளால் ஒட்டுமொத்த இந்தியாவும் நீண்ட காலம் வீட்டிலேயே உட்கார வேண்டியிருக்கிறது. இதற்கு முன் வீட்டை விட்டு வெளியே வராதவர்கள் கூட, இப்போது வர வேண்டாம் என்று சொல்லப்பட்டிருப்பதால் வெளியே வருகிறார்கள். நீங்கள் அனைவரது உயிருக்கும் ஆபத்தைத் தேடித் தருகிறீர்கள்.
மேற்கொண்டு இந்தத் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். ராணுவம் வந்தால்தான் மக்களைத் திருத்த முடியும் என்ற நிலை வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று ஆவேசமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசியிருக்கிறார் சல்மான் கான்.