![vijay sac](http://image.nakkheeran.in/cdn/farfuture/06hq-PAvImhP-snQQqyXdxWmvcL8Wee_UEa0lF3nixQ/1605682740/sites/default/files/inline-images/sac-vj-im.jpg)
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், சமீபத்தில் விஜய்யின் பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்த அக்கட்சியின் பொருளாளராக, விஜய்யின் தாயார் ஷோபாவும், தலைவராக பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜாவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து விஜய், “தனக்கும், தன் தந்தை பதிவு செய்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த அறிக்கையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ, புகைப்படத்தையோ அனுமதியின்றி யார் பயன்படுத்தினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்” அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து விஜய், தனது மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்தார்.
இதனிடையே, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ஷோபா ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் அவர், அஸோசியேஷன் ஆரம்பிக்கப்போவதாக கூறி, எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும் குற்றம் சாட்டினார். இந்தநிலையில், எஸ்.ஏ.சி. கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட பத்பநாமன் என்கிற ஆர்.கே.ராஜா, தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், உறுப்பினராக தொடர்ந்து செயல்படப்போவதாகவும் அறிவித்துள்ளார். தனது கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் விலகியது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.