Skip to main content

ரசிகர்களும் ஹேப்பி; ஓனரும் ஹேப்பி - கடைசி நேரத்தில் வெளியான அறிவிப்பு

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

rohini thatre will screening  leo

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் நாளை (19.10.2023) வெளியாகிறது. 

 

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகத் தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தது. பின்பு படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், 19 ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சியை 4 மணிக்கே திரையிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்தது நீதிமன்றம். மேலும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தது. 

 

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவர்களின் வழக்கறிஞர்கள் குழு 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டி உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுத்தனர். மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்த உள்துறை செயலாளர் அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே தமிழகம் முழுவதும் 9 மணிக்கே முதல் காட்சி தொடங்குகிறது. 

 

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில், லியோ படம் திரையிடப்படவில்லை என இன்று காலை அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. விநியோகஸ்தருடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. 

 

இதே திரையரங்கில் லியோ பட ட்ரைலருக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அதிகமாக குவிந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கின் நாற்காலிகளை சேதப்படுத்தினர். நாற்காலிகளின் பஞ்சு உறைகள் கிழிக்கப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட நாற்காலிகள் சேதமடைந்ததாகத் திரையரங்கு நிர்வாகம் தெரிவித்தது. மேலும் இதே திரையரங்கில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு, துணிவு படத்தின், சிறப்பு காட்சியின் போது திரையரங்கம் முன்பு லாரியின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு வெளியான எந்த படத்திற்கும் அதிகாலை மற்றும் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில் தற்போது அனைத்து பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிந்து லியோ படம் திரையிடவுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் அந்த திரையரங்கம் தெரிவித்துள்ளது. காலையில் திரையிடப்படவில்லை எனத் தெரிவித்துவிட்டு மாலை திரையிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்