Skip to main content

வைரலான பேச்சு - திடீரென விலகிய ரத்னகுமார்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

rathna kumar leo success meet speech viral

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது. 

 

இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ரத்னகுமார் பேசுகையில், "மாஸ்டர் படத்தில் 'வாத்தி ரெய்டு...' பாடலை அந்தச் சூழலுக்கு ஏற்றது போல் எழுதியிருந்தோம். ஆனால், அதன் பிறகு நாங்க படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த நெய்வேலியில் உண்மையாகவே ரெய்டு வந்துவிட்டனர்.

 

லியோவில் ‘நான் ரெடி தான் வரவா...' பாடலை கதைக்களத்துக்காக எழுதியிருந்தோம். ஆனால், அந்தப் பாடல் இப்போது என்னவாக மாறியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். நான் விஜய்யுடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர் எப்போதும் யாரையும் நிற்க வைத்து பேசமாட்டார். யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்கமாட்டார். எல்லோரையும் சமமாகவே பார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்" என்றார். இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

இந்த நிலையில் திடீரென்று தற்காலிகமாக சமூக வலைத்தளங்களிலிருந்து பிரேக் எடுத்துக் கொள்வதாக ரத்னகுமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கதை எழுதுவதற்காக பிரேக் எடுப்பதாகவும் அடுத்த பட அறிவிப்பு வரும் வரை இது தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்