தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல தளங்களில் பணியாற்றியவர் பி.எஸ்.நிவாஸ்.
இவர் கேரளாவைச் சேர்ந்தவர். சிறந்த ஒளிப்பதிவுக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர். இந்நிலையில், இன்று கேரளாவில் காலமானார்.
நிவாஸின் மறைவிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் தனித்த ஆளுமையுடன் விளங்கிய ஒளிப்பதிவாளர், இயக்குநர் பி.எஸ். நிவாஸ் அவர்களின் இறப்புச்செய்தியை என்னால் எளிதில் கடந்துவிட முடியவில்லை. அவரது பங்களிப்பு குறித்து இத்தலைமுறை அறியாது!
தமிழ்த் திரைக்கு நிவாஸ் அவர்களின் பங்களிப்பு, எனக்கும் அவருக்குமான சந்திப்பு, தொடர்பு குறித்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுத உள்ளேன். இந்திய சினிமாவில் பலப்பல ஆளுமைகளை உருவாக்கிய அடையாறு திரைப்படக் கல்லூரி மேலும் ஒரு செல்லக் குழந்தையை இழந்துள்ளது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.