Skip to main content

வாழ்த்திய விராட் கோலி - விமர்சித்த பிரகாஷ் ராஜ்

Published on 29/08/2024 | Edited on 29/08/2024
prakash raj criticise virat kohli post

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) கெளரவ செயலாளரான ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(ICC) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை ஐ.சி.சி. தலைவராக இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே (62) பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், மூன்றாவது முறையாக தனக்கு போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் ஜெய் ஷா போட்டியின்றி புதிய தலைவராக தேர்வாகியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய் ஷா (35) மிகக் குறைந்த வயதிலேயே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா வருகிற டிசம்பர் 1ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார். இதையொட்டி பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

இதில் விராட் கோலியின் வாழ்த்து பதிவிற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். விராட் கோலியின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், “ஐ.சி.சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக... பேட்ஸ்மேன்...பவுலர்...விக்கெட் கீப்பர்... ஃபீல்டர்... மற்றும் ஆல்ரவுண்ட்... இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த லெஜண்டிற்கு அனைவரும் கைத்தட்டல் அளிப்போம்” என்று ஜெய் ஷாவை விமர்சிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்