![hfdhj](http://image.nakkheeran.in/cdn/farfuture/xdZQCx4j9SXRg6tRIBebuj1D9L1XArAX4bdIdvu0jR0/1589452749/sites/default/files/inline-images/maxresdefault_119.jpg)
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையே கரோனாவால் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் சலூன் கடைக்காரர் மோகன் என்பவர் தன்னுடைய மகள் படிப்பு செலவிற்காக வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தில் தன்னுடைய பகுதியில் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருவதை பாராட்டி நடிகர் பார்த்திபன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லை தோப்பு கரோனா பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்களை அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறு சிறு உதவிகளை செய்து வந்தார். தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்தபோது, அவரது மகள் நேத்ரா அந்தப் பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார்.
இந்த செய்தி என்னை பெரிதாகப் பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்து கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டுப் புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள் என அனைத்தையும் நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி, பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளிப் படிப்புக்குரிய அனைத்துச் செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும் வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன். பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் சார்பாக இது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் எங்களுக்கு இந்த நிகழ்வு பெரும் மனநிறைவை அளித்தது" என குறிப்பிட்டுள்ளார்.