![vdgdegdeg](http://image.nakkheeran.in/cdn/farfuture/7UwGH5bXsXGTW5W4Ht1-Stx4PRoq8GcoEQGnYzMLpz0/1625238421/sites/default/files/inline-images/maxresdefault_147.jpg)
திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்குப் பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், சுமார் 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் (நேற்று) ஜூலை 2ஆம் தேதி ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்யக் கடைசி நாளாகும். இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பா. ரஞ்சித் ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்...
"ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்ட ஒளிப்பதிவு சட்டம் 2021இல் செய்த திருத்தம், கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்கான அவர்களின் ஒட்டுமொத்தநிலைப்பாட்டை காண்பிக்கிறது. சினிமாவில் சிந்தனை மற்றும் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதில் ஆபத்தான முன்னுதாரணத்தை இது அமைக்கிறது. இந்த திருத்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்'' என பதிவிட்டுள்ளார்.