![hyrsregs](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mm0klcYXbnhH7fG-dehXisyvOqQNgIQd5GJwN67SN7s/1619179237/sites/default/files/inline-images/EyOLatrXIAI4VUq_0.jpg)
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவர் உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. அதில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனாவின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வரும் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோரின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
ஆனால் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டிய நிர்பந்தத்தில் படக்குழு இருப்பதால் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தெலங்கானாவில் தற்போது இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தெலுங்கானா மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.