Skip to main content

"இந்தப் படத்தில் இருவருக்குத் தேசிய விருது கிடைக்கும்" - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேச்சு! 

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

DSP

 

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் பேசுகையில், "எல்லோரையும்விட எனக்கு சந்தோஷம் என்னவென்றால் அல்லு அர்ஜூன் தமிழில் வருவதுதான். நாங்க சென்னையில் வளர்ந்த பசங்க. அல்லுவுக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்று தெரியும். இந்தப்படம் தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்வதாக நினைப்பீர்கள். ஆனால் கதை கேட்ட அன்றே, இது தமிழ் படம் நீங்கள் தெலுங்கில் எடுக்கிறீர்கள் என்று நான் சொன்னேன். படத்தின் கதையின் உயிர் எல்லாம் தமிழில் பொருந்திப்போகும்.

 

அல்லு அர்ஜூன் மிகச்சிறந்த உழைப்பாளி. இயக்குநர் சுகுமாருக்கு வாழ்த்துகள். வேலை பார்த்த நாங்களே ஆச்சர்யப்படும்படி படத்தை எடுத்துள்ளார்கள். படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அதை எப்படி சொல்வது எனத் தெரியவில்லை, அதை ஃபைட் என்றே சொல்ல முடியாது. சினிமாவில் மிகச்சிறந்த ஆக்சன் காட்சியாக அது இருக்கும். இந்தப்படம் அல்லு அர்ஜூனை இந்திய நட்சத்திரமாக மாற்றும். இந்தப்படத்தில் அல்லு அர்ஜூனும் சுகுமாரும் தேசிய விருதை வெல்வார்கள். இருவருக்கும் வாழ்த்துகள். படத்தில் பணியாற்றிய பாடகர்கள், பாடலாசிரியர்கள் அனைனவருக்கும் நன்றி. ஆன்ட்ரியாவுக்கு ஸ்பெஷல் நன்றி. புஷ்பா உங்கள் எல்லோரையும் கவரும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்