![modi letter to kicha sudeep regards his mother passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/RDBev3y53edUMRXmSK6La-92FhALBybsiINIAMPUJAY/1730125541/sites/default/files/inline-images/211_21.jpg)
கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். தமிழில் ‘நான் ஈ’ படம் மூலம் பிரபலமானார். இப்போது சேரன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அங்கு தொகுத்து வழங்குகிறார். இப்போது நடந்து வரும் சீசனுடன் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கிச்சா சுதீப்பின் தாயார் உடல் நலக் குறைவால் கடந்த 20ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து கிச்சாச் சுதீப் தனது தாயார் குறித்து உருக்கமாக ஒரு நீண்ட பதிவை தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், “என் வாழ்க்கையில் முதன் முறையாக உதவியற்ற ஒரு சூழலை நான் எதிர்கொள்கிறேன். என் அம்மா சுய நினைவில் இருக்கும்போது என்னால் அவரை பார்க்க முடியவில்லை. சில மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. என் வாழ்வின் விலைமதிக்க முடியாத ஒன்று என்னை விட்டு சென்றுவிட்டது” என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கிச்சா சுதீப்பிற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை கிச்சா சுதீப், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இந்த கடினமான நேரத்தில் உங்களின் சிந்தனைமிக்க வார்த்தைகள் ஆறுதலை அளிக்கின்றன” எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. நட்சத்திர பேச்சாளராக கிச்சா சுதீப் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.