தெலுங்கு திரையுலகில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷில்பா பாண்டே நடிப்பில் வெளியான இப்படத்தை சந்தீப் வங்கா ரெட்டி இயக்கினார். அந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படமாக மட்டும் அமையாமல் தெலுங்கு மொழி பேசாதவர்களிடமும் இப்படம் கவர்ந்தது.
![dhruv vikram](http://image.nakkheeran.in/cdn/farfuture/pc7uRZTWYMCIa3YEOuMn12MeS_zqqOAAxR7k1K5_5vg/1560945334/sites/default/files/inline-images/vikram-dhruv.jpg)
இதனை அடுத்து இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலரும் முயற்சித்த நிலையில் ஈ4 எண்டர்டெயின்மெண்ட்ச் நிறுவனம் அப்படத்திற்கான உரிமைத்தை வாங்கினார்கள். அதில் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இயக்குனர் பாலா அப்படத்தை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பாலா இயக்கியது தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காமல் போனதால் அதை அப்படியே நிறுத்திவிட்டு. சந்தீப் வங்கா ரெட்டியின் முதல் துணை இயக்குநர் கிரிசய்யா வைத்து படம் எடுக்க இருப்பதாக அறிவித்தது படக்குழு. ஆதித்ய வர்மா என்று மாற்றப்பட்டு ஐம்பது நாட்களில் ஷூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. ஷூட்டிங் முழுவதும் மகனுடன் விக்ரம் இருந்து பார்த்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் துருவ் விக்ரம், தனது அப்பா விக்ரம் குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “ஒவ்வொரு நாளும் வந்ததற்கு, விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்கு, எப்போதும் நான் சிறப்பாகச் செயல்பட என்னை உந்தியதற்கு, எல்லோரும் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்ததற்கு, லட்சியத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததற்கு, எதிர்காலத்தைப் பற்றி எப்போதும் தெளிவாக இருந்ததற்கு, நான் நம்பிக்கை இழப்பதை அனுமதிக்காமல் இருந்ததற்கு, எனக்காக 'ஆதித்யா வர்மா'வைத் தந்து, உருவாக்கியதற்கு, முடிந்த எல்லாவற்றையும் செய்ததற்கு, எப்போதும் எனக்கு ஆதரவு தந்ததற்கு, உங்களுக்குத் தெரிந்த அத்தனையையும் தொடர்ந்து எனக்குக் கற்றுத் தந்தற்கு.... நீங்களின்றி இது எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.
இந்தப் படத்துக்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்தீர்கள் என்பதைத் தெரிந்த ஒருவர், டீஸரில் உங்கள் பெயர் எங்கே என்று கேட்டார். அது என் பெயருக்குப் பின்னாலும், நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் இருக்கிறது என்றேன். தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. உங்களைப் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் துருவ் விக்ரம்.