![aranmanai 4 update vijay sethupathi plays a lead role](http://image.nakkheeran.in/cdn/farfuture/aNMk3tHJy9SclFIF4nheQ0lPGcl7gGQZH5Ax65_L5gI/1674306092/sites/default/files/inline-images/29_31.jpg)
சுந்தர்.சி கடைசியாக ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே, நடிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் சுந்தர்.சி 'வல்லான்', 'தலைநகரம் 2' மற்றும் 'ஒன் 2 ஒன்' படங்களில் பிசியாக உள்ளார்.
தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் சுந்தர்.சி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2014ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அந்த வெற்றியால் தொடர்ந்து 'அரண்மனை 2', 'அரண்மனை 3' உள்ளிட்ட படங்களை எடுத்தார்.
இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான 'அரண்மனை 4' படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. லைகா தயாரிக்கவுள்ளதாகப் பேசப்படும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி உறுதியாகும்பட்சத்தில் முதல் முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் அரண்மனை படத்தொடரின் அடுத்த பாகத்தில் 'பீட்சா', 'அனபெல் சேதுபதி' படங்களுக்கு பிறகு மீண்டும் ஹாரர் ஜானரில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.