Skip to main content

தந்தையின் இறுதிச்சடங்கு; அஜித் வேண்டுகோள்!

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

  Ajit request father’s funeral

 

நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இன்று உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அஜித் குமார் சார்பாக அறிக்கை ஒன்றை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்; அறிக்கையின் விவரம் பின்வருமாறு...

 

எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

 

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

 

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

 

எங்கள் தந்தையாரின் இறுதிச் சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்கக் கருதுகிறோம். எனவே, இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

 

 

சார்ந்த செய்திகள்