Skip to main content

"நாங்க என்ன ஜனநாயக நாடா..." - நிர்மலா சீதாராமனை விமர்சித்த பிரபல நடிகை

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

actress vinodhini criticized nirmala sitharaman

 

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் பார்க்கவில்லை, டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன். அமெரிக்காவின் டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாணய சந்தையில் வளர்ந்து வரும் நாடுகளின் நாணயத்தின் மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாகவே உள்ளது”  எனத் தெரிவித்தார். 


 
இந்நிலையில் நிதி அமைச்சரின் பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானதோடு, இணையதள வாசிகள் பலர் அதனை விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில், நடிகை வினோதினி இதனை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு உணவகத்தின் முதலாளிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடக்கும் ஒரு வாக்குவாதம் போல் அவர் நடித்துள்ளார். 

 

அதில், "குறைகளை தைரியமாகச் சொல்லுங்க. குறை சொன்னா உள்ள தூக்கிப் போட நாங்க என்ன ஜனநாயக நாடா... நாங்க ஒரு உணவகம். நீங்க எங்களின் குறைகளை சுட்டிக் காட்டினால்தான் எங்கள் குறைகளை நாங்கள் திருத்திக்க முடியும். என்ன குறை சொல்லுங்க. என்னது...வெங்காய தோசையில் வெங்காயம் கம்மியா இருந்துதா... வெங்காயம் கம்மியா இல்ல தோசை பெருசா இருந்தது. நல்லா யோசித்து பாருங்கள். 

 

அப்புறம் என்ன குறை. சாம்பார்ல கேரட் தேட வேண்டியிருந்ததா... ஆனா கேரட்ல சாம்பாரை தேட வேண்டியதில்லைல. எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க. அதுதான் எல்லாமே. வேற என்ன குறை. தேங்கா சட்னியில தேங்காய் ஊசி போயிருந்ததா. தேங்காய் அப்படியே தான் இருந்தது. நாள் தான் கடந்து போச்சு. அதுக்கு தேங்கா என்ன பண்ண முடியும். நீங்க எல்லாத்தையும் நெகட்டிவா யோசிக்கிறீங்க. ஒரு படத்துல சொல்லுவாங்கல்ல. ஒரு சின்ன வரி பக்கத்துல பெரிய வரியை போட்டு பாருங்க, அப்புறம் அந்த சின்ன வரியை பத்தி நீங்க கவலைப் படமாட்டீங்க. என்னது அது கோடா. கோடோ ரோடோ நாங்க அத வரின்னுதான் சொல்லுவோம்." என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.