![actress cid Sakunthala passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/v4-57WahB_DTd1TdQDyGHySLfF4OcSvwkC70P0_pPEg/1726637190/sites/default/files/inline-images/463_15.jpg)
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 600 படங்களுக்கு மேல் பணியாற்றியவர் சி.ஐ.டி. சகுந்தலா. சேலத்தை சேர்ந்த இவர் 1960ஆம் ஆண்டு வெளியான ‘கைதி கண்ணாயிரம்’ படம் மூலம் நடனக் கலைஞராக சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்தார்.
1970ஆம் ஆண்டு ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான சி.ஐ.டி. சங்கர் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெருமளவு வரவேற்பை பெற, அதன் பிறகு சி.ஐ.டி. சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பிலிருந்தும் விலகி பெங்களூருவில் இருக்கும் மகள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக சி.ஐ.டி. சகுந்தலா காலமாகியுள்ளார். இவரது மறைவு திரை பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சி.ஐ.டி. சகுந்தலாவின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடக்கவிருக்கிறது.