Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #03

Published on 25/01/2022 | Edited on 27/01/2022

 

 

maayapuraa series part-3

 

 

நிலாவில் வீடு கட்டி, விண்மீன்கள் பொறுக்கிவந்து, மின்னலில் தோரணம் கட்டி, மேகத்தினை மெத்தை ஆக்கிக் கனவு காணுகின்ற வயது சங்கவிக்கு. ஆம்! 16-ல் இருக்கும் இளைய வசந்தம் அவள். ஆனாலும் அக்காலம் அவளைப் போன்ற கிராமத்துக் கவிதைகளை அப்பாவியாகவே வைத்திருந்தது. சைக்கிள் வைத்திருப்பவர்களையே பணக்காரர்கள் என்று நினைக்கிற காலகட்டம் அது. இட்லி, தோசை, அரிசி சாப்பாடு சாப்பிட்டாலே வசதி படைத்தவர்கள் என்று நினைக்கும் கிராமத்து வாழ்க்கை. இட்லி தோசையே அந்நாளில் பலகாரம் என்று பலராலும் அழைக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் காலை உணவாக இட்லி சாப்பிடும் நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிருத்திகை ,அமாவாசை, தீபாவளி உள்ளிட்ட விசேச நாட்களிலும், வீட்டிற்கு உறவினர் வரும் நாட்களிலும் தான் இவை கிடைக்கும்.

 

‘சகலகலா வல்லவன்’ படத்தில் "இளமை.. இதோ.. இதோ... ” என்று கமல் போன்ற ஹீரோக்கள் புல்லட்டில் ஸ்டைலாக பறந்து வரும் போதெல்லாம், சிவப்பாக இருப்பவர்கள் தான் புல்லட் ஓட்ட வேண்டும். அவர்கள்தான் புல்லட் வைத்திருப்பார்கள் என்று அப்பாவியாக நினைத்த அறியாத வயது சங்கவிக்கு. அத்தை வீட்டில் இப்படி ஒரு புல்லட்டை பார்த்ததும்,  ஜூவில் சிங்கத்தைப் பார்த்ததுபோல, அப்படியே அசந்து நின்றுவிட்டாள். அந்த புல்லட்டில் அசோக் மாமாவை பார்த்ததும் சிவப்பாக இருப்பவர்கள் தான் புல்லட் ஓட்ட வேண்டும் என்ற அவளுடைய தீர்மானம் முதலில் உடைந்தது. அசோக் மாநிறத்தில் இருப்பவன். என்றாலும் வாட்ட சாட்டன். அவனிடம் ஒருவித கம்பீரம் அலட்சியமாய் அமர்ந்திருந்தது.

 

மகனிடம் சொல்லிக்கொண்டே வெளியே வந்த தங்கம், வாசலில் மூட்டை முடிச்சுடன் நின்றுகொண்டிருந்த அலமேலுவையும் சங்கவியியும் பார்த்துவிட்டாள். ‘சொன்னாப் போதும்னு வந்துட்டாளுங்க கொட்டிகறத்துக்கு’ என்று மனதில் நினைத்துக்கொண்டவள், புருசன்காரனை ஒரு கணம் எண்ணிப் பார்த்துவிட்டு, செயற்கை உற்சாகத்தோடு, வாயெல்லாம் பல்லாக "வாங்க மச்சி... வாம்மா சங்கவி" என்று வரவேற்றாள் தங்கம். அம்மா யாரிடம் பேசுகிறாள் என்று திரும்பிப் பார்த்த அசோக்கின் கண்களுக்கு அலமேலு அத்தை மங்கலாகத்தான் தெரிந்தாள். அவன் விழிகளுக்கு தலை நிறைய மஞ்சள் கனகாம்பரம் பூ, சைடில் ஸ்பீக்கர் புனல் கட்டியது போல செம்பருத்திப்பூ, கழுத்தில் வெள்ளை மணி என, 16 வயதினிலே மயிலு மாதிரியே நின்றிருந்த சங்கவிதான் பளிச்சென்று தெரிந்தாள். மனசுக்குள் இனம்புரியாத ஒரு புயல் குபீரென வீசியது. ஆண்களின் அடிப்படை குணத்தில் ஒன்று, வெளி மனிதர்கள் மத்தியில் வீட்டில் இருக்கும் பெண்களை அதிகாரம் பண்ணுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம் பிறக்கும். அத்தையை கவனித்து விட்டவன்... “அடடே வாங்க அத்தே...” என்று அலமேலுவை அழைத்துவிட்டு, சங்கவியை கவனிக்காதது போல, "அம்மா மதியம் 15 ஆளுக்கு கஞ்சி காய்ச்சிடு. ஒரு மணி சங்கு பிடிக்கும்போது காராமணியை அனுப்பறேன். களத்தில் உளுந்து ஒப்பிடி பண்ணனும்" என்றபடி ஸ்டைலாக புல்லட்டை உதைத்து, ஒரு யூ டர்ன் போட்டான். வண்டி, சங்கவி மீது மோதுவது போல பயமுறுத்திவிட்டுச் சென்றது. அவன் சென்ற பிறகு அவன் விட்ட புல்லட் புகை, சங்கவி முகத்தருகே கருமேகமாகக் குவிய, அதற்கு நடுவே நிலவாக ஒளிர்ந்தது அவளின் கிராமத்து முகம். அசோக்கின் நினைவில் சங்கவியின் அகலக் கண்களும், அதில் இருந்த ஒருவித படபடப்பும், அவள் உதட்டில் இருந்த வெள்ளந்திப் புன்னகையும், ஒரு நிமிடம் அவன் கண்முன்னே  வந்து சென்றது.

 

அலமேலுவும் சங்கவியும் தக்கத்தைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் காலெடுத்து வைத்தனர். செல்வத்தின் வீடு பெருமாளின் வீட்டை விட மிகப் பெரியது நடுவில் பெரிய முற்றம். 50 மூட்டை நெல்லைக் காய வைக்கலாம் அந்த அளவுக்குப்  பெரியது. வெளித் திண்ணையைத்  தாண்டி உள்ளே கூடத்தில் நுழையும் போது ‘டொக்...டொக்.’ என்று வெற்றிலையை இடிக்கும் ஓசை கேட்டது. கூடத்தில் மாநிறத்துக்கும் கூடுதலான நிறத்தில், ரவிக்கை இல்லாமல் சிவப்பு நிற நூல் புடவை கட்டி, காதில் சிவப்புக்கல் கொப்பு கம்மல் அணிந்தபடி, கழுத்தில் பவள மாலை ஊஞ்சலாட, ஒரு உருவம் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தது.  இவர்களின் வரவறிந்து... "யாரடி... அவளுங்க. வில்லு வண்டியில ஏற்றி விட்ட சீர் செனத்திய சுமக்க முடியாம சுமந்து வர, சீமைச் சிறுக்கிக" என்று அலமேலுவை புகழ்வது மாதிரி கிண்டலாகப் பேசினார் தங்கத்தின் அம்மா தனம்மா. தனம்மாவின்  இழுவை ஓசையும், "டொக்..டொக்" ஓசையும்  தாளம் தப்பாமல் லயம் சேர்ந்தது போல் இருந்தது.

 

கூடத்தின் ஒரு பக்க மூலையில் கல் இயந்திரத்தில் அரிசி உடைத்து கொண்டிருந்தனர் நான்கு பெண்கள். அலமேலுவைப் பார்த்ததும் "வா... தாயீ, இப்பதான் நேரம் கிடச்சுதா?" என்று கேட்டவர்களுக்கு புன்னகையை பதிலாக்கி விட்டு "அண்ணி... மதியம் சோறு பொங்கியாச்சா... நான் பொங்கறேன்" என்று சொல்லிக்கொண்டே தங்கத்தின் பதிலை எதிர்பார்க்காமல் அடுக்களைக்குள் சென்றாள் அலமேலு. "சங்கவி, கொல்லைப் பக்கம் அடுப்பை பத்த வச்சு, கிணத்தடியில் இருக்கிற ஈயம் பூசிய  பித்தளை அண்டாவில் தண்ணிய புடிச்சு அடுப்பில வைம்மா. ஆளுகளுக்கு கஞ்சு காய்ச்சனும். காராமணி பய  எடுக்கவந்துடுவான்." என்று சொல்லிவிட்டு அலமேலுவை அதிகாரம் பண்ண அடுக்களைக்குள் வந்தாள் தங்கம்.

 

சவுக்கைக் கட்டைகளை வைத்து அடுப்பை மூட்டி, உலை வைத்திருந்தாள் அலமேலு. தங்கத்தை பார்த்ததும் "அண்ணி... அரிசி எவ்வளவு போடணும்னு சொல்லுங்க" என்றாள். "ரெண்டு பெரிய படி போட்டு வடிச்சிடு. கல்யாணம் வரைக்கும் ஆளுங்களுக்கும் இங்கிருந்துதான் சாப்பாடு" என்று சொல்லிவிட்டு "மொதல்ல எங்க அம்மாவுக்கு காபி போட்டு கொடுத்துடு அலமேலு. நல்லா கொழகொழன்னு பில்டர் காபியா இருந்தாதான் அம்மா குடிக்கும்” என்று சொன்னாள் தங்கம். அலமேலுவை பேச்சுக்கு கூட காபி குடிக்கிறாயா? என்று கேட்கவே இல்லை. அடுப்பில் கஞ்சிக்கு  உலை வைத்துவிட்டு, அது கொதிக்கும் நேரத்தில், கொல்லைப் புறத்தில் இருந்த பசு மாடுகளுக்கு சோளத் தட்டுகளை உதறிப் போட்டாள் சங்கவி. அந்த நேரம் பார்த்து கோணிப்பை எடுப்பதற்காக வீட்டிற்குத் திரும்பி வந்த அசோக், வீட்டின் பின்புறம் இருந்த தொம்பைக் கிடங்கு அறையில் கோணியை உதறி போட்டான். அப்போது  சங்கவி, பாவாடையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு சோளத்தட்டு உதறும் காட்சி அவன் கண்ணில் பட்டது. அவன் கண்கள் ஏனோ சில நொடிகள் இமைக்க மறந்தன. சட்டென்று சுதாரித்துக் கொண்டு கோணிப்பையை உதறி போட ஆரம்பித்தான்.

 

கொதிக்கும் உலையில் கஞ்சிக்கு நொய்யைப் போட்டு நெருப்பை எரியவிட்ட சங்கவியின் மூக்கை துளைத்தது, அம்மா போட்ட காபியின் வாசம். வேகமாக உள் வாசலுக்கு வந்து "அம்மா எனக்கும் ஒரு லோட்டா காப்பி கொடு மா" என்றாள்.

 

"வந்த இடத்தில் நாக்கை அடக்கிக்கிக்கிட்டுகொண்டு சும்மாயிரு" என்று அதட்டினாள் அலமேலு.

 

"நம்ம அத்தை வீடுதானே மா" என்றாள் அப்பாவியாக.

 

"அதான் சொல்றேன். இது அத்தை வீடு தான், அம்மா வீடு இல்லை, இங்கே அவங்க சொல்லாம நீயா எதையும் எடுத்துச் சாப்பிடக் கூடாது" என்று அறிவுரை சொன்னாள் அலமேலு.

 

முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு அடுப்புப் பக்கம் போனாள் சங்கவி. இதை குடோனில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த அசோக், "அத்தை, காபி வாசனை வீட்டைத் தூக்குது. எனக்கும்  உங்க கமகம காப்பியைக் கொடுங்க"என்றான்.

 

"இதோ... வரேன்" என்று அவசரமாக காபி போட்டு சூடாக எடுத்துக்கொண்டு சென்று, கூடத்தில் நின்று  கொண்டிருந்த அசோக்கிடம் கொடுத்தாள் அலமேலு.

 

காபியை வாங்கிய அசோக் "பயங்கரமாக சுடுது.. இது எப்ப ஆர்றது?  நான் எப்ப குடிக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான். தனம் பாட்டியும் லோட்டா நிறைய காபியுடன் உட்கார்ந்திருந்தார். தங்கம் வாயில் வெற்றிலை பாக்கு போட்டிருந்தார். "த...புள்ள, அத்தை மவளே இங்க வா" என்று சங்கவியை அழைத்தான் அசோக். பயந்துகொண்டே கூடத்திற்கு வந்த சங்கவி, ‘பாம்பு வாயில் சிக்கிய தவளையின் குரல் போல’ மெல்லியதாக "என் பேர் புள்ள இல்ல சங்கவி" என்றாள்.

 

"அடேங்கப்பா, உனக்குப் பேசக்கூடத் தெரியுதே... சரி.. சரி இதைக் வச்சுக்கோ. இந்த காபியைக் குடிக்காம வீணாக்கினால் அம்மா திட்டுவாங்க. நீயே குடிச்சிடு" என்று அவளிடம் நீட்டினான் அசோக். பிறர் கையில் இருக்கும் உணவுப் பொருளைத் தட்டி விடும் அளவுக்கு அம்மா ஒன்றும் கொடுமைக்காரி இல்லைன்னு அசோக்குக்கு தெரியும். அமைதியாக நின்ற சங்கவி யை பார்த்து "வாங்கிக்கோ" என்று தங்கம் சொன்னாள். அலமேலுவும் கண்ணாலேயே ’வாங்கிக்கோ’ என்றாள். காபியை வாங்கிக் கொண்டாள் சங்கவி. கோணிப் பைகளை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறினான் அசோக். அடுக்களையில் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் அலமேலு.

 

வாசலில் "ஜல்.. ஜல்" என்று சலங்கை சத்தத்துடன் ஒரு வில்லு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து பூசணிக்காய்க்கு கை கால் முளைத்தது போல ஒரு பெண்மணியின் உருவம் குதித்தது. பட்டுச் சேலை கட்டி, இரண்டு கைகளிலும் தங்க வளையல்கள். அந்த வளையல்கள் சதைகளில் புதைந்து கொண்டு, காப்பு மாதிரி இருந்தது.  தலைக்கு கீழே கழுத்து என்ற உறுப்பைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அதிலும் டாலர் செயின் ,நெக்லஸ், காசு மாலை என்று என்று அனைத்தையும் போட்டு அழுத்தி வைத்திருந்தார்கள். அவள்தான்  தங்கத்தின் அணணன் மகள் புவனா. அந்தப் பொண்ணு இறங்கி நடந்து வரும்போது இரண்டரை அடி பித்தளை அண்டாவை  உருட்டி விட்டது போலவே இருந்தது. புவனாவிற்கு பின்னால் புவனாவிற்கு 15 வயது அதிகமானால் எப்படி இருப்பாரோ அதே தோற்றத்தில் ஒரு பெண்மணி இறங்கி வந்தார் அவர் தங்கத்தின் அண்ணி நாகம்மா.

 

"டேய் .. இருளாண்டி  வண்டியில இருந்து பழம், பட்சணமெல்லாம் வச்சிருக்கற அண்டாவை உள்ளே எடுத்துட்டு வாடா" என்று கம்பீரமாக அதட்டிவிட்டு மீசையை முறுக்கியபடி வண்டியில் இருந்து இறங்கிய படியே குரல் கொடுத்த அந்த மனிதர், பட்டு வேட்டி சட்டை போட்ட ஐயனார் மாதிரி இருந்தார். அவர்தான் கண்ணுசாமி. தங்கத்தின் அண்ணன். இவர்களைப் பார்த்ததும் வாசல் வரைக்கும் வந்து, "வாங்க அண்ணே, வாங்க மதனி, வாம்மா புவனா”  என்று மனம் மகிழ அழைத்துச்சென்றாள் தங்கம்.

 

அலமேலுவும் வாசலுக்கு வந்து அனைவரையும் வரவேற்றாள். தனம்மா எழுந்து வந்து புவனாவின் கன்னத்தை இரண்டு கைகளாலும் தடவி முத்தம் கொடுத்து திருஷ்டி கழித்தார். "பன்னீரில் குளித்து, பாலாற்று தண்ணிய குடிச்சு, வெண்ணெய்யிலும், நெய்யிலும் கைகழுவி, பாதாமும், முந்திரியும்  சாப்பிட்டு வளர்ந்த இண்டு, இடுக்கு, நாடு நகரம் எட்டு ஜில்லா சீமையிலும் இல்லாத பேரழகி என் பேத்தி" என்று சொல்லி பூரித்தார் தனம்மா. "எங்கம்மா உன் வீட்டுக்காரரை காணோம்" என்று கணீர் குரலில் கேட்டார் கண்ணுசாமி. "நாளைக்கு பந்தக்கால் வச்சு நலங்கு வைக்கிறது, அதான் டவுனுக்கு பொருளுங்க வாங்கியாரப் போயிருக்காரு அண்ணா" என்றாள் தங்கம்.

 

"கல்யாண மாப்பிள்ளை  மணியும், அப்பா  கூட போயிருக்காரா? என்று  மீண்டும் சந்தேகத்தைக் கேட்டார் கண்ணுசாமி. "அண்ணா... மணி அவன் கூட்டாளிங்களுக்கு பத்திரிக்கை  வைக்கப்  போயிருக்கான்" என்று விளக்கினாள் தங்கம்.

 

"எங்க என் புல்லட் மாப்பிள்ளையையும் காணோம்"? என்று நாகம்மா  கேட்டாள்.

 

 "அசோக்... காடு கழனியே கதின்னு இருக்கான்" என்று அங்கலாய்த்தார் தங்கம்.

 

"அசோக் மாமா, பியூசி படிச்சிட்டு ஏன் இப்படி பண்ணை பார்க்கறாரு" என்று புவனா சலிப்புடன் சொன்னாள்.

 

"விடுமா, நாளைக்கு வீட்டோட மாப்பிள்ளையா நம்ம ரைஸ் மில்லில் உட்கார்ந்தார்னா எல்லாம் சரியாயிடும்" என்று மகளுக்கு ஆறுதல் சொன்னார் கண்ணுசாமி.

 

"சாப்பாடு தயாரா இருக்கு எல்லாரும் சாப்பிட வாங்க" என்று அழைத்தாள் அலமேலு. "என்னம்மா அலமேலு ஏதாவது வெள்ளாமை இருக்கா? மூணு வேளை கஞ்சி குடிக்க முடியுதா? பெருமாளு எப்படி இருக்கான்?" -என்று எகத்தாளமாகவும் தோரணையாகவும் கேட்டார் கண்ணுசாமி. "எல்லாம் நல்லபடியா இருக்காங்க அண்ணா" என்று அமைதியாகச் சொன்னாள் அலமேலு. கொல்லைப்புறம் வந்த புவனா அங்கு மாட்டுக்குத் தவிடு புண்ணாக்கு போட்டு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த  சங்கவியைப்  பார்த்து,"இதாரு வேலக்காரியா? என்ன உலகத்துல இல்லாத அதிசயமா இருக்கு. இங்க வீட்டு வேலைக்காரி என்னவோ சீவி முடிச்சு சிங்காரிச்சு கிட்டு இருக்குறாளே.” என்று கத்தி எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி சொன்னாள். சங்கவியோ ஒரே நொடியில் தன் அத்தனைத் துள்ளளையும் பறிகொடுத்துவிட்டு கூனிக் குறுகிப்போய் சட்டென நின்றாள்.

 

அப்போது...

 

(சிறகுகள் அசையும் )
 

முந்தையப் பகுதி : சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #02