Skip to main content

சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வழக்கறிஞர்; குடும்பத்தை பாதித்த தொழில் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 37

Published on 31/07/2024 | Edited on 31/07/2024
Jay zen manangal Vs manithargal 37

தொழில் மீது தாக்கத்தால் குடும்ப உறவுகளை சந்தேக கண்ணோடு பார்க்கும் வழக்கறிஞர் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

என்னிடம் ஒரு வக்கீல் கவுன்சிலிங்கிற்காக வந்திருந்தார். நேர்மையான  தீர்ப்புக்கு போராடும் வழக்குகளை விட்டு குறைகளோடு, பிரச்சனைகளோடு வந்திருக்கும் சவாலான வழக்குகளை கையாள வேண்டும் என்று நினைப்பவர். இதுவே அவர் பணியின் இயல்பு. நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகள், வீடு, கார், என்று நன்றாக செட்டில் ஆனவர். ஆனால் இப்பொழுது கணவன் மனைவிக்கு உறவினுள் பிரச்சனை வந்திருக்கிறது. மனைவி பிள்ளைகள் என்று யாராவது வெளியே சென்றாலோ அல்லது யாரிடம் பேசினாலோ ஒரு சந்தேகத்தினுடே விசாரிக்கிறார். உண்மையாவே பள்ளிக்கு தான் போனீர்களா என்று பிள்ளைகளிடமும் அதே போல சந்தேகிக்க ஆரம்பித்திருக்கிறார்.  

தனக்கு தன்னிடம் தப்பு செய்தவர்கள் வரும் போது தான் சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னார். இப்பொழுது குற்றம் கொண்ட மனிதர்களை நார்மலாக பார்த்து பார்த்து தன் வீட்டில் நார்மலான மனிதர்களை பார்க்கும்போது அவர்கள் பின்னாடி இருக்கும் குற்றம் என்ன என்றே பார்த்து வீட்டிற்கு கணவனாக, அப்பாவாக இல்லாமல் வக்கீலாகவவே இருந்திருக்கிறார். அடிக்கடி பிரச்சினையாகி இப்பொழுது மனைவி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவதாக ரெடி ஆகி வெளியேறி விட்டார்.  பிள்ளைகளிடம் பேச்சு இல்லை. இப்பொழுது தான் என்னிடம் வந்திருந்தார். 

அவர் மனைவியும், பிள்ளைகளும் வந்து கவுன்சிலிங்கிற்கு பேசினார்கள். மனைவியிடம் விசாரித்த போது  உதாரணமாக, சாதாரணமாக செருப்பு தைத்து விட்டு வந்தால் கூட எதற்காக இப்போது புது செருப்பு தைக்க வேண்டும்? என்ன அவசியம்? எங்கே போக வேண்டும்? என்று ரொம்ப ஆழமாக பார்க்கிறார். யாராவது வீட்டிற்கு கெஸ்ட் வந்தால் கூட ஏன் அவர் உன் பக்கம் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லாரிடமும் சந்தேகத்துடன் இருக்கிறார். முடியவில்லை சார் என்றார். பிள்ளைகள் அவரிடம் பேசவே முடியாது என்ன பேசினாலும் அவர்தான் கடைசியாக ஜெயிப்பார் நாங்கள் எல்லோரும் பேசுவோம், ஆனால் கடைசியில் ஜெயிப்பது அவர்தான் என்றனர். தன் அப்பா  பணத்திற்காக அதிகமாக ஏமாற்றி பணம் வாங்குவதை  தன் கிளையண்ட்களிடம் பேசும் கான்வெர்ஷேசனையும் இவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதனால் அப்பா மீது இருக்கும் இயல்பான பாசமோ மரியாதையோ இப்போது இல்லை. இப்படி மூவரும் மாறி மாறி அவர்களிடம் இருக்கும் பிரச்சினையை குறைகளை எடுத்து சொல்ல சொல்ல இவருக்கு கண் கலங்க ஆரம்பித்துவிட்டது. 

செஷன்கள் முடிந்து இவர் ஆரம்பத்திலேயே தன் மீது இருக்கும் தவறுகள் எல்லோரும் சொல்லிவிட்டார்கள் இனிமேல் மாற வேண்டியது தான் தான் என்று அவரே ஒத்துக் கொண்டார். முதல் முறை ஒரு வழக்கறிஞர் வாதாட வேண்டிய அவசியமே இல்லாமல் முதலிலேயே ஒத்துக் கொண்டது இதுதான். இது எல்லாம் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக பேசினாலே இதற்கு தீர்வு கிடைத்துவிடும். அதற்கு வழிகாட்டியாக தான் கவுன்சிலிங் இருக்க வேண்டும். வீட்டிலேயே எல்லாரும் உட்கார்ந்து பேச சூழல் அமையாது. ஒருவருக்கொருவர் சண்டையில வீண் வாக்குவாதத்திலேயோ அடிதடியில் கூட முடியலாம்.  ஆனால் கவுன்சிலர் என்று வரும்போது அந்த நேரத்திற்கான சரியான கேள்வியை நோக்கி நகர்த்தி ஒவ்வொருவரின் மனநிலையை வைத்து அவர்கள் பேச வேண்டியதை பேச வைத்து அவர்களே தீர்த்துக் கொள்ள வைக்க வேண்டும். அப்படிதான் இந்த கவுன்சிலிங் முடிந்தது.