Skip to main content

இப்ப நடிகர், முன்னாடி ரெஸ்லர், அதுக்கு முன்னாடி என்னன்னு தெரியுமா? டுவைன் ஜான்சன் | வென்றோர் சொல் #25 

Published on 20/12/2020 | Edited on 20/12/2020

scorpion king dwayne johnson

 

'அது ஆசிரியர்களுக்கான கழிவறை. நல்ல உயரமான, திடகாத்திரமான உடலமைப்பு கொண்ட மாணவன் ஒருவன் அங்கே சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட உடற்கல்வி ஆசிரியர் அவனைக் கண்டித்து 'இங்கிருந்து வெளியேறு' என்கிறார். "எனது வேலையை முடித்து விட்டு வெளியேறுவேன்" எனத் திமிருடன் பதிலளித்த அவன், சிறுநீர் கழித்து முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்கின்றனர். பள்ளிக் காலங்களில் உடற்கல்வி ஆசிரியருடன் முறைத்துக்கொள்ளுதல் மற்றும் மோதல் போக்கைக் கடைபிடித்த அனுபவம் நிச்சயம் நம் அனைவருக்கும் இருக்கும். அந்த நேரத்திலேயே நம் கண்ணம் சிவப்பதோ அல்லது பள்ளித் தலைமையாசிரியரின் அறை வாசலில் உப்புக்குவியலின் மீது முழங்காலிடுவதோதான் அதன்பிறகான முடிவாக இருக்கும். ஆனால், இந்த மாணவனுக்கு நடந்ததோ வேறு!

 

அன்று இரவு அம்மாணவனுக்கு  தூக்கம் வரவில்லை. தான் நடந்து கொண்ட விதம் தவறு என அவன் ஆழ்மனது அவனுக்கு உணர்த்துகிறது. மறுநாள் காலை பள்ளிக்குச் சென்று முதல் வேலையாக அந்த ஆசிரியரைச் சந்தித்து மன்னிப்பு கேட்கிறான். அவரும், மன்னித்து விட்டு அவனோடு கை குலுக்குகிறார். அவருக்கு பேரதிர்ச்சி. அந்தப் பள்ளியில் யாருடைய கைகளிலும் இல்லாத கடினத்தன்மையும் வலுவையும் அவன் கைகளில் உணர்கிறார். ’எனக்காக ஒன்று செய்வாயா’ என அவர் கேட்க, அந்த மாணவனும் சரி என்கிறான். ’நாளை முதல் கால்பந்து விளையாட வந்துவிடு’ என்கிறார். ஆம்... 'ராக்' என்று உலகம் கொண்டாடும் டுவைன் ஜான்சனே அந்தச் சிறுவன். தொழில்முறை குத்துச்சண்டை வீரர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஆளுமையாக அவர் உருவாவதற்கு விதை போட்டது உடற்கல்வி ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே நடந்த அந்த கழிவறைச் சந்திப்புதான் என்றால் மிகையில்லை.

 

1972-ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மல்யுத்த வீரருக்கு மகனாகப் பிறந்தார் ராக். அவரது தந்தை, பெயர் சொல்லக்கூடிய அளவிலான வீரர் என்றாலும், குடும்ப சூழலை சமாளிக்கக் கூடிய அளவிலான வருமானத்தை அவரால் ஈட்ட முடியவில்லை. ராக்கிற்கு இளம் வயதாக இருக்கும் போதே அவரது பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாகரத்து ராக்கை வெகுவாகப் பாதித்தது. அதன் பிறகு தனது தாயாருடன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த ராக், தனக்காக தன் தாய் எதிர்கொள்ளும் துயரங்களைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்போடு, தன் கனவினை நோக்கி கடினமாக உழைக்கத் தொடங்கினார். சிறந்த கால்பந்தாட்ட வீரனாக வருவதே அவரது லட்சியமாக இருந்தாலும், காலம் அவரை ரெஸ்லர் என்றழைக்கப்படும் மல்யுத்த வீரராக்கியது. அதன்பிறகு, அவர் எடுத்த நடிகர் அவதாரம் உலகப் புகழின் உச்சாணிக்கொம்பில் அவரை நிறுத்தியுள்ளது.

 

dwayne johnson with his father

தந்தையுடன்...

 

"அப்போது எனக்கு 14 வயது. நானும் என் அம்மாவும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினோம். நாங்கள் வாடகை கொடுக்காததால் வீட்டை விட்டு வெளியேறக் கூறி கதவில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. என் அம்மா கதறி அழுதுவிட்டார். என் வாழ்க்கையில் அத்தருணத்தை எளிதில் மறக்க முடியாது. ஏனென்றால், நாங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் என் அம்மா அழுவதும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என அன்றுதான் முடிவெடுத்தேன். திருட்டுத் தொழில் செய்யும் கும்பலோடு இணைந்து வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம், நகை, துணிமணிகள் திருடி அதை வெளிச் சந்தையில் விற்று பணம் சம்பாதித்துள்ளேன். இதற்காக இளம் வயதிலேயே பலமுறை கைதும் செய்யப்பட்டுள்ளேன். பின், என்னுடைய பள்ளி விளையாட்டு ஆசிரியர் மூலம் கால்பந்து எனக்கு அறிமுகமாகியது. அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பல அணிகளுக்காக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்.ஃஎப்.எல் தொடரில் விளையாடுவதே எனது லட்சியமாக இருந்தது. அதன்மூலம் நிறைய பணம் கிடைக்கும். அதில், என் பெற்றோருக்காக ஒரு வீடு வாங்கிக்கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அச்சமயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக என் கனவு நிறைவேறவில்லை. பின் என் அப்பாவிடம் சென்று நான் ரெஸ்லராக ஆசைப்படுகிறேன் எனக் கூறினேன். அவர் சம்மதிக்கவில்லை. உன் வாழ்க்கையிலேயே தவறான முடிவு ஒன்றை எடுக்கிறாய் என்றார். என் முடிவில் நான் உறுதியாக இருந்ததால், அவர் எனக்குப் பயிற்சியளித்தார்".

 

தங்குவதற்கு வீடில்லை என்று தன்னுடைய அம்மா கதறியழுத நாளே என் வாழ்வில் முக்கியமான நாள் எனத் தான் ஏறும் அனைத்து மேடைகளிலும் அழுத்தமாகக் கூறுகிறார் ராக். "என்னுடைய கஷ்ட காலங்களை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன், அதுதான் நிகழ்காலத்தில் என்னைச் சுற்றி உள்ளதை உணர்ந்து கொள்ள வழி செய்கிறது. என்னை விட கடினமாக உழைக்க கூடிய ஒருவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், என்னிடம் உள்ள வெற்றிப்பசியை விட வேறொருவரிடம் அதிகம் இருக்க முடியாது. வெற்றிக்காகவும், சிறந்த விஷயத்திற்காகவும் வேட்கை கொண்டு காத்திருப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமானது" எனத் தன்னுடைய வெற்றியின் ரகசியத்தையும் பகிர்கிறார் ராக். கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!


முந்தைய பகுதி...

"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா..." -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு! |வென்றோர் சொல் #24

 

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.