Skip to main content

இரண்டாவது திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதர்; பணக்காரருக்குக் காத்திருந்த அதிர்ச்சி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு:52

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
detective malathis investigation 52

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டாவது திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதரில் இருந்த பெண்ணை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

58 வயதுகொண்ட வசதியான நபர் ஒருவர், தன்னுடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் தன் பிள்ளைகள் சொல்லியதன் பேரில் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அதனால், மேட்ரிமோனி மூலம் ஒரு 45 வயது பெண்ணை பிடித்து இரண்டாவது திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் ஒரு வருடமாக இருக்கிறார். அந்த ஒரு வருடத்தில் பெண் அவரிடம் இருந்து அதிகமான பணம் வாங்கியிருக்கிறார். மேலும், அந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகம் இருப்பதால் அதனை விசாரித்துச் சொல்லுமாறு கேட்டார். அவர் ஹை பை வீட்டில் இருப்பதால் அதிகப்படியான செக்யூரிட்டி இருக்கும். இரண்டு மூன்று கார் இருந்தாலும், அந்த பெண் ஒரு டாக்ஸியை புக் செய்து வெளியே கிளம்புகிறார். இந்த தகவலை அந்த நபர் சொன்னார்.

அதன் பேரில், அந்த பெண்ணை ஃபாலோவ் செய்தோம். ஒரு இடத்தில் கட்டுமான பணி நடந்துகொண்டு இருக்கிறது. அந்த இடத்திற்குப் பெண் செல்கிறார். அதை பார்த்துவிட்டு வேறு ஒரு இடத்திற்குச் சென்று ஒரு நபரை சந்தித்து காஃபி ஷாப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு கொஞ்ச நேரம் பீச்சுக்கு போய் அங்கு அமர்கிறார்கள். அதன் பின்னர், இந்த பெண் வீட்டுக்கு வருகிறார். இது மாதிரியான நடவடிக்கை அடிக்கடி தொடர்கிறது. அதன் பிறகு, பெண் சந்திக்கும் அந்த நபரை ஃபாலோவ் செய்தோம். அவரை பின் தொடர்ந்ததில், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவரது வீட்டில் வேறு யாராவது பெண் இருப்பார் என நினைத்தால் அங்கு பிள்ளைகளைத் தவிர யாரும் இல்லை. 

மீண்டும் அந்த பெண்ணை ஃபாலோவ் செய்தோம். ஒரு நாள், இந்த குழந்தைகளை அந்த பெண் பார்க்கப் போகிறார். அந்த குழந்தைகள், இந்த பெண்ணை அம்மா எனக் கூறிக்கொண்டு கட்டிப்பிடிக்கிறது. அதன் பிறகு கிளாரிஃபை ஆகி, நமக்கு கேஸ் கொடுத்த நபரை அழைத்து, எப்படி இந்த பெண்ணை தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டோம். அதற்கு மேட்ரிமோனி மூலம் அந்த பெண்ணை தேர்ந்தெடுத்ததாக அவர் சொன்னார். அந்த பெண் தன் கணவருடன், உங்களை ஏமாற்றி உங்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தனி வீடே கட்டிக்கொண்டு இருக்கிறார் என்ற உண்மையைச் சொன்னோம். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த பெண்ணை அழைத்து ஒரு செட்டில்மெண்டை கொடுத்து இனிமேல் வரவேண்டாம் என்று அனுப்பிவிட்டார். வசதியான நபர் என்பதால், இந்த ஏமாற்றத்தை வெளியே சொல்ல முடியாது என்ற நோக்கத்தில் தான் திட்டம் தீட்டி ஏமாற்றியிருக்கிறார்கள்.