Skip to main content

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியில் மாற்றம்? - பீல்டிங் பயிற்சியாளர் பதில்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

team india

 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று (18.06.2021) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் தொடங்க இருந்தது. ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.

 

அதேநேரத்தில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று அரை மணிநேரம் முன்னதாக தொடங்கவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் களமிறங்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மழையின் காரணமாக அணியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் டாஸ் போடப்படாததால், களமிறங்கும் அணியில் மாற்றங்கள் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தநிலையில், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரிடம் களமிறங்கவுள்ள அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என கேள்வியெழுப்பட்டது. இதற்குப் பதிலளித்துள்ள ஸ்ரீதர், "ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணி, எந்தவொரு ஆடுகளத்திலும், எந்தவொரு வானிலை சூழலிலும் விளையாடக்கூடியது. அதேநேரத்தில் டாஸ் இன்னும் போடப்படவில்லை. எனவே மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருந்தால் டாஸின்போது முடிவு செய்வோம்" என கூறியுள்ளார்.