Skip to main content

தோற்றாலும் அவருக்காக மகிழ்ச்சி - நடராஜனை புகழ்ந்த வார்னர்!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020
warner natarajan

 

 

தமிழக அணி வீரர் நடராஜன், ஐ.பி.எல் தொடரில், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நெட் பவுலராக தேர்வானார். பின்பு இந்திய அணியில் இடம் பிடித்த அவர், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

 

நடராஜனின் சிறப்பான ஆட்டத்தை, கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினர் புகழ்ந்து வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா, தனது இருபது ஓவர் தொடரின், தொடர் நாயகன் விருதை நடராஜனுக்கு அளித்துப் பாராட்டினார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரில், நடராஜனின் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர், இருபது ஓவர் தொடரை இழந்தாலும் நடராஜனுக்காக மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார்.

 

இதுத்தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வெற்றியோ தோல்வியோ அல்லது ட்ராவோ, நாங்கள் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். தொடரை இழந்துவிட்டோம் ஆனாலும் நடராஜனுக்காக மகிழாமல் இருக்கமுடியவில்லை. நடராஜன் மிகவும் அருமையான மற்றும் விளையாட்டை மிகவும் நேசிக்கும் ஒருவர். ஒரு நெட் பவுலராக இந்த சுற்றுப்பயணத்திற்கு வந்து, இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் அறிமுகமானது என்ன ஒரு சாதனை!" எனப் பதிவிட்டுள்ளார்.

  

 

 

Next Story

புத்தாண்டு தினம்; அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட டேவிட் வார்னர்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
David Warner gave the shock announcement New Year's Day

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (03-01-24) ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்திருந்தார், 

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர், மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டேவிட் வார்னர், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் இதுவரை 6,932 ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்களை குவித்திருந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 6வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில்,தொடக்க வீரரான டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பை அணிக்கு வழங்கினார். 

மேலும், இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் டி20 போட்டிகளில் டேவிட் வார்னர் தொடர்ந்து விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளது என்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.