Skip to main content

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

sachin

 

தமிழக இளம்வீரரான வருண் சக்கரவர்த்தி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

 

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். சுழற்பந்து வீச்சாளரான இவர், நடப்புத் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியின் வெற்றிக்குப் பெரிய அளவில் பங்களித்து வருகிறார். நேற்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியிலும் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் வருண் சக்கரவர்த்தியின் ஆட்டம் குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில் அவர், "இந்தத் தொடர் முழுவதும் வருண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மிக அரிதாகவே சில போட்டிகளில் கூடுதல் ரன்களை விட்டுக் கொடுத்தார். அவரிடம் இருந்து நிலையான ஆட்டம் வெளிப்படுகிறது. கடினமான நேரங்களில் சிறப்பாகப் பந்துவீசுகிறார். சமநிலை மற்றும் தன்னம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். ஒரு பந்துவீச்சாளராக களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பாதி குறைந்துவிடும்" எனக் கூறினார்.