
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 47வது போட்டி, சவல் மன்சிங் மைதானத்தில் நேற்று (29.04.2025) இரவு நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் குஜராத் அணி முதலில் களமிறங்கியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பு 209 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற 210 ரன்களை குஜராத் அணி இலக்காக நிர்ணயித்தது.
இதன் மூலம் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. இருப்பினும் ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் 5 பந்துகளில் 2 விக்கெட் இழப்பு 212 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும் சூரியவன்சியும் களமிறங்கினர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய 14 வயது வைபவ் சூரியவன்சி 35 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சூரியவன்சி 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
அதே சமயம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இந்திய வீரர், அதிவேகமாக சதம் விளாசியவர் மற்றும் குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருதை வென்றவர் உள்ளிட்ட சாதனைகளை அணி வீரர் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இந்த போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார். இறுதியாக சூரியவன்சி 38 பந்துகளில் 101 ரன்களை குவித்தார். முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராகப் பெங்களூர் அணி வீரர் கிரிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது சிறப்பான ஆட்டத்திற்காக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் சூரியவன்சிக்கு வழங்கப்பட்டது.